கடலூர்-விழுப்புரம் மண்டல அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற விழுப்புரம் இ.எஸ்.கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் கடலூர்-விழுப்புரம் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடலூர் புனித ஜோசப் கலைக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில், கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் கலந்து கொண்ட விழுப்புரம் இ.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் குழுவினர் இரண்டாமிடம் பெற்றனர்.
இதே போல, இந்தக் கல்லூரி மாணவர்கள் ச.பரணி, ஹரிஹரன், விஷ்ணுவர்மா, ஆகாஷ், மு.ஸ்டாலின் ஆகியோர் திருப்பத்தூரில் நடைபெற்ற மண்டலங்களுக்கிடையேயான கூடைப்பந்துப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பெற்றனர்.
மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று வந்த மாணவர்கள் குழுவினருக்கு இ.எஸ்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் செந்தில்குமார், திங்கள்கிழமை கேடயம் பரிசளித்து வாழ்த்தினார். மாணவர்களுக்கு பயிற்சி அளித்த கல்லூரி உடற்கல்வி இயக்குநர் மோகன்ராஜை கல்லூரி முதல்வர் ஆ.மனோகரன் மற்றும் துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.