மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கிப் பெட்டகங்களில் சோதனை
லஞ்சம் வாங்கியதாக கைதான கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின், கடலூரில் உள்ள வங்கிகளின் பெட்டகங்களை திறந்து விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை சோதனையிட்டனர்.
வாகன தகுதிச்சான்று வாங்க லஞ்சம் வாங்கியதாக, கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு, அவரது உதவியாளர் செந்தில்குமார் ஆகியோர் கடந்த 11ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். கடலூரில் உள்ள பாபுவின் வீட்டில் சோதனை நடத்தி ரூ.35 லட்சம் ரொக்கம், 200 பவுன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து, பாபுவின் வங்கிக் கணக்கு, வங்கிப் பெட்டகங்கள் முடக்கி வைக்கப்பட்டன. இந்த நிலையில், கடலூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட இரு வங்கிகளில் பாபு வைத்திருந்த 3 பெட்டகங்களை டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையிலான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் திறந்து சோதனையிட்டனர். அதில், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி நகைகள் இருந்தன. இதையடுத்து, அவற்றை பெட்டகத்தில் வைத்துவிட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, வேறு வங்கிகளில் பாபு வைத்துள்ள பெட்டகங்களை திறந்து சோதனையிட்ட பிறகு, அனைத்துப் பெட்டகங்களிலும் உள்ள நகைகள், பொருள்களை பறிமுதல் செய்ய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.