இணையவழி நிதி மேலாண்மை திட்டத்தால் செலவினங்கள் குறையும்: அரசு முதன்மைச் செயலர்

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் அரசுத் திட்ட நிதிப் பரிவர்த்தனைகளை இணைய வழியில் ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்தால் காலவிரயம், செலவினங்கள் குறையும் என

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் அரசுத் திட்ட நிதிப் பரிவர்த்தனைகளை இணைய வழியில் ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்தால் காலவிரயம், செலவினங்கள் குறையும் என அரசின் முதன்மைச் செயலர் சு.ஜவஹர் தெரிவித்தார்.
 அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம் குறித்த மாநாடு விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 மாநில கருவூல கணக்குத் துறையின் முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் தென்காசி சு.ஜவஹர் தலைமை வகித்துப் பேசியதாவது:
 கருவூலத் துறையானது மாநிலம் முழுவதும் உள்ள 9 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளம், அரசுத் திட்டங்களுக்கான நிதியை வழங்குவது, வரவு, செலவு ஆகியவற்றை பராமரித்து வருகிறது.
 விழுப்புரம் மாவட்டத்தில் கடந்தாண்டில் (2017-18) ரூ.573.64 கோடி ஓய்வூதியமாகவும், ரூ.2739.31 கோடி அரசு ஊழியர்களுக்கான ஊதியமாகவும் கருவூலங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அரசுக்கு ரூ.631.43 கோடி வருவாய் பெறப்பட்டுள்ளது.
 அரசுத் திட்டங்கள் சிறப்பாக நடைபெறவும், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சம்பளம் உள்ளிட்ட கருவூலம் சார்ந்த பணிகளை மேம்படுத்துவதற்கும், இணைய வழியில் ஒருங்கிணைக்கும், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ரூ.288.91 கோடி செலவில் இதற்கான பணிகளை செயல்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது.
 இத்திட்டத்தில் கருவூலத்துறை, ரிசர்வ் வங்கி, வருமான வரித்துறை, சரக்கு மற்றும் சேவை வலைத்தளம், வங்கிகள் ஒருங்கிணைக்கப்படும்.
 இதை நடைமுறைப்படுத்துவதன் மூலம், தமிழகத்தில் உள்ள சம்பளம் மற்றும் கணக்கு அலுவலக அலுவலர்கள் 29 ஆயிரம் பேர் தங்களது பட்டியல்களை நேரடி இணையம் மூலம் தாமதமின்றி கருவூலத்தில் சமர்ப்பிக்கலாம்.
 இதனால், கருவூலங்கள் காகிதமற்ற அலுவலகங்களாக மாறும். கணினி வழி பரிவர்த்தனைகள் முறைப்படுத்தப்படுவதால், மனித பயன்பாட்டால் நிகழும் தவறுகள், முறைகேடுகள் தவிர்க்கப்படும். அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைக்கப்படுவதால், நேரடி இணைய வழியாக சிறந்த வரவு செலவு திட்டத்தை கையாள இயலும்.
 இச்சிறப்பு திட்டம் மூலமாக சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப்பணியாளர்களின் பணிப்பதிவேடு கணினி மயமாக்கப்படுகிறது.
 மின்னணு பணிப்பதிவேடு ஒருங்கிணைக்கப்படுவதால், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, ஓய்வு பெறும்போது உரிய தகவல்கள் உடனே எடுத்து செயல்படுத்தி ஓய்வூதியப் பலன்கள் உரிய காலத்தில் பெற முடியும்.
 இந்தப் புதிய திட்டம் நவம்பர் 2018 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்காக, அலுவலர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
 இதன் மூலம் 9 லட்சம் அரசு ஊழியர்கள், 7.30 லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் உள்ளாட்சி உள்ளிட்ட பிற துறைகள் என 52 லட்சம் வாடிக்கையாளர்களுக்கான சேவையை கருவூலத்துறை விரைந்து செயல்படுத்தும் என்றார்.
 நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், டிஐஜி எஸ்.சந்தோஷ்குமார், மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார், உதவி ஆட்சியர்கள் டி.சாருஸ்ரீ, மெர்ஸி ரம்யா, பயிற்சி ஆட்சியர்
 வி.சரவணன், டிஆர்ஓ பிருந்தாதேவி, சென்னை கருவூலம் கூடுதல் இயக்குநர் ஏ.பி.மகாபாரதி, மண்டல இணை இயக்குநர் எஸ்.திருஞானசம்பந்தம், மாவட்ட கருவூல அலுவலர் பு.ரவிசங்கர், கூடுதல் அலுவலர் ஜி.சாவித்திரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com