விவசாயிகளுக்கு பலன் தரும் வகையில் தேசிய வேளாண் சந்தையுடன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை இணைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனுடன், மாவட்டத்தில் இயங்கி வரும் 4 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை பதிவு செய்து சேர்க்கும் வகையில், விழுப்புரம் வேளாண் வணிக துணை இயக்குநர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் வேளாண் வணிக துணை இயக்குநர் எ.தனசேகர் தலைமை வகித்து, மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் குறித்தும், அதில் வியாபாரிகள் இணையதளம் மூலம் பங்கு பெறுவதால், விவசாயிகளின் விளைபொருளுக்கு இணையும் இத்திட்டத்தினால் கூடுதல் விலை கிடைப்பது குறித்தும், ஒளிவு மறைவற்ற வியாபாரம், விளை பொருள்களுக்கான தொகை இணையதளம் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துதல் குறித்தும் எடுத்துக் கூறினார்.
விழுப்புரம் விற்பனைக்குழு செயலாளர் ஆறுமுகராஜன், மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், விவசாயிகள், வியாபாரிகளை இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்வதும் குறித்தும் விளக்கினார்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் விற்பனையாளராக பதிவு செய்யும் வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.
உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர்கள், வேளாண்மை அலுவலர்கள், வியாபாரிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.