விழுப்புரம் புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
விழுப்புரம் அருகேயுள்ள திருவாமாத்தூர் தேரடி வீதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ரவி(45). அதே பகுதியைச் சேர்ந்த சீனு மகன் பாபு(25). இவர்கள், ஞாயிற்றுக்கிழமை இரவு, வெளியூர் சென்று விட்டு, வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்தனர்.
செஞ்சி புறவழிச்சாலை சந்திப்பு அருகே வந்தபோது, இவர்களது மோட்டார் சைக்கிள் எதிரே வந்த விழுப்புரம் ஜிஆர்பி தெருவைச் சேர்ந்த வைத்திலிங்கம் மகன் சிலம்பரசன் ஓட்டி வந்த பைக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பலத்த காயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சிலம்பரசன், பாபு ஆகியோர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிலம்பரசன் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு திங்கள்கிழமை இறந்தார்.
விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.