மக்களவை, சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களுக்காக சென்னையிலிருந்து ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கார்கள், பேருந்துகளில் வியாழக்கிழமை சென்றதால், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. மேலும், பேருந்துகளின் கூரைகள் மீது அமர்ந்தும் பயணிகள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர்.
தமிழகத்தில் மக்களவை, சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. இந்தத் தேர்தல்களில் பங்கேற்பதற்காக சென்னையில் பணிபுரியும் ஏராளமானோர் வியாழக்கிழமை தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
இதனால், சென்னையிலிருந்து விழுப்புரம், திருச்சி மார்க்கத்தில் தென் மாவட்டங்களை நோக்கி வேன், கார்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஓங்கூர், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடிகளில் காலை 11 மணி முதல் ஏராளமான வாகனங்கள் பல அடி தொலைவுக்கு தேங்கி நின்றன. இதையடுத்து, இந்த மார்க்கத்தில் கூடுதல் வழிகளை திறந்து வாகனங்களை அனுமதித்தனர். இதேபோல, வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் 2 மணி வரை சென்னையிலிருந்து திண்டிவனம், விழுப்புரம் வழியாகச் சென்ற அரசுப் பேருந்துகளிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், பயணிகள் பேருந்துகளின் கூரைகளின் மீது ஏறி அமர்ந்தபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.
விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர் பகுதிகள் வரை பேருந்துகள் சென்ற பிறகே கூட்டம் குறைந்து பேருந்தினுள் பயணிக்க முடிந்ததாக கூரை மீது பயணித்தவர்கள் தெரிவித்தனர்.