கள்ளக்குறிச்சி நகரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பிரசாரம் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் இரா.ராமநாதன் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசுகையில், கள்ளக்குறிச்சி நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். ஆட்டோக்களுக்கான ஆவணங்கள் சரியாக வைத்திருக்க வேண்டும். வாகனத்தை கவனமாக இயக்க வேண்டும்.
அதிக வேகத்தில் சென்று பெரிய வாகனங்களை முந்திச் செல்லக்கூடாது. சாலை விதிகளை பின்பற்ற வேண்டும்.
மது போதையில் வாகனத்தை இயக்கக் கூடாது என்பன போன்ற அறிவுரைகளை வழங்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர்கள் தங்க.விஜயக்குமார், சீ.ரேவதி, கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் ப.சத்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.