விழுப்புரத்தில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணிகள் தாமதத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது. இதனால், ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்
டுள்ளது.
விழுப்புரம் நகரில் நேருஜி சாலையும், அதன் தொடர்ச்சியாக உள்ள கிழக்கு பாண்டி சாலையும் குறுகிய நிலையில் (7 மீட்டர் அகலம்) உள்ளதால், போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
இந்தச் சாலையை விரிவுபடுத்துவதற்காக நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைப்புப் பணிகளை கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டனர்.
சாலையை 14 மீட்டருக்கு அகலப்படுத்த, முதல் கட்டமாக மகாராஜபுரத்தில் இருந்து நான்குமுனை சந்திப்பு வரை ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையோர பழைய கால்வாயையும் அகற்றினர்.
பின்னர், ரயில்வே மேம்பாலத்திலிருந்து நேருஜி சாலையில் இருபுறமும் கான்கிரீட் கால்வாய் அமைக்க, முதல்கட்டமாக, இடதுபுறம் கான்கிரீட் கால்வாய் அமைத்தனர்.
இந்தப் பணி ஜனவரியில் முடிந்து, கால்வாயுடன் நடைபாதை கற்கள் பதித்து சாலையுடன் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதேபோல, ரயில்வே மேம்பாலத்திலிருந்து கிழக்கு பாண்டி சாலையில் ஒருபுறம் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு, ஒருபுறத்தில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகையில், அப்பணிகள் நிறைவடையும் முன்னரே, மற்றொரு புறத்தில் (எதிர்புறம்) கான்கிரீட் கால்வாய் அமைக்க பணிகளைத் தொடங்கிவிட்டனர்.
இதற்காக, சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுவிட்டது. இரு புறங்களிலும் பள்ளம் ஏற்படுத்தப்பட்டு விட்டதால், தார்ச் சாலை மிகவும் குறுகிய அளவிலே உள்ளது. இதனால், எதிரும் புதிருமாக வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.
தினசரி காலை, மாலை அலுவல் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து போலீஸார் இருந்தும் நெரிசலை சீர்செய்ய முடியவில்லை. சாலை விரிவாக்கப் பணிகள் திட்டமிட்டபடி ஜனவரிக்குள் முடிக்க வேண்டும்.
தினசரி காலை, மாலை என தொடர்ச்சியாக போக்குவரத்து நெரிசல் இருந்து வருவதால், வியாபாரிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டம்: இது குறித்து நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் செல்வம் கூறியதாவது: நகரப் பகுதி என்பதால், குறுக்கிடும் சாலையோர கேபிள்கள், குடிநீர்க் குழாய்கள், புதை சாக்கடை குழாய்களை அகற்றி சீரமைக்க வேண்டியுள்ளது. பிற துறையினரும் பணிகளை மேற்கொள்ள உள்ளதால் தாமதமா
கிறது.
பணிகளை விரைவாக முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரித்துள்ளோம். மார்ச்சில் முடிக்க திட்டமிட்டும் முடியாது என்பதால், ஜூன் மாதத்துக்குள் முடிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் முடிந்த பிறகு, கோலியனூர் வரை விரிவாக்கப் பணிகளை தொடங்க உள்ளோம் என்றார்.