புதுச்சேரியிலிருந்து காரில் மதுப் புட்டிகள் கடத்திய ஆந்திர இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் சோதனைச் சாவடியில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சீனுவாசன், தலைமைக் காவலர் மஞ்சநாதன் தலைமையிலான போலீஸார் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக சென்னை நோக்கிச் சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் 49 புதுவை மாநில மதுப் புட்டிகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். அவர் ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த காதர் மொய்தீன் மகன் ஷேக் ஷாரூக் (19) என்பதும், புதுச்சேரியிலிருந்து
ஆந்திரத்துக்கு மதுப் புட்டிகளை கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து, மதுப் புட்டிகள் மற்றும் காரை பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு
பிரிவில் ஒப்படைத்தனர். மதுவிலக்கு போலீஸார் வழக்குப் பதிந்து, ஷேக் பரூக்கை கைது செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.