காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (சி.ஆர்.பி.எஃப்.) வீரர்களுக்கு விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உயிரிழந்த 43 சிஆர்பிஎஃப் வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையிலும், அஞ்சலி செலுத்தும் வகையிலும் விழுப்புரத்தில் விவேகானந்தர் பேரவை, ராஜஸ்தான் வியாபாரிகள் சங்கம் சார்பில், மௌன அஞ்சலி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் ரயிலடியில் புறப்பட்ட ஊர்வலம் டி.எஸ்.பி. அலுவலகம், திரு.வி.க. வீதி, நேருஜி சாலை, காமராஜர் சாலை உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது. பெண்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. உயிரிழந்த வீரர்களின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில், விவேகானந்தர் பேரவை மாவட்டத் தலைவர் கணபதி, மாவட்டச் செயலர் அர்ஜுனன், இணைச் செயலர் மதுதண்டபாணி, செய்தித் தொடர்பாளர் சூர்யநாராயணன், ராஜஸ்தான் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மகேந்தர் சிங், லட்சுமணன் சிங், விக்ரம் சிங், வினோத் சிங், பாஜக மாவட்ட பொதுச் செயலர் சுகுமார், தேசியப் பொதுக்குழு உறுப்பினர் சிவதியாகராஜன், மாவட்டச் செயலர் சக்திவேல், நகரத் தலைவர் பழனி, வி.ஏ.டி. கலிவரதன், மேற்கு மாவட்டச் செயலர் ராஜா, இந்து முன்னணி நிர்வாகிகள் சிவா, ராமு, இந்து மக்கள் கட்சி மாநில அமைப்புக் குழுச் செயலர் ஆசைத்தம்பி, லகுவித்யோ பாரதி அமைப்பைச் சேர்ந்த ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திண்டிவனம்
திண்டிவனத்தில் காந்தி சிலை அருகே நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் நண்பர்கள் அரிமா சங்கத் தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். அரிமா சங்க மாவட்ட ஆளுநர் சரவணன் வீரமரணமடைந்த வீரர்களின் படத்துக்கு மெழுகு வர்த்தி ஏற்றி வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் சங்கச் செயலர் ஜெயராஜ், பொருளாளர் விசுவலிங்கம், மாவட்டத் தலைவர்கள் வெங்கடேசன், துரை, ஏகாம்பரம், வட்டாரத் தலைவர் சைமன்துரைசிங் இளம் அரிமா சங்கம் சார்பில் நடராஜன், செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.