விழுப்புரம் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்த நாள் ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
அவைத் தலைவர் எஸ்.பச்சையாப்பிள்ளை தலைமை வகித்தார். க.காமராஜ் எம்பி, விவசாயப் பிரிவு மாவட்டச் செயலாளர் கதிர்.தண்டபாணி, மாவட்ட மகளிர் அணி தலைவி க.அழகுவேலு பாபு முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி ஒன்றியச் செயலர் அ.ராஜசேகர் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலர் இரா.குமரகுரு எம்எல்ஏ பங்கேற்று பேசியதாவது:
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் செய்தும், கட்சிக் கொடியை ஏற்றி, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், நல உதவிகளை வழங்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் ஒன்றிணைந்து வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் என்றார்.
மாவட்ட அண்ணா தொழிற் சங்கச் செயலாளர் கோ.பாலகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் ப.தங்கபாண்டியன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் அமுதா, மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் எஸ்.ஜான்பாஷா, தியாகதுருகம் பேரூர் செயலாளர் பி.எஸ்.கே.ஆர்.ஷியாம்சுந்தர் உள்ளிட்டோர் பேசினர். முன்னாள் பேரவைத் தலைவர் இராம.ஞானவேல், மாவட்ட மருத்துவர் அணி பொருளாளர் இ.குமரேசன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு பொருளாளர் இ.வெற்றிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி நகரச் செயலர் எம்.பாபு நன்றி கூறினார்.