சங்கராபுரம் வட்டத்தில் வாடகை மையம் அமைக்க உயர் தொழில்நுட்ப கரும்பு அறுவடை இயந்திரத்தை மானியத் திட்டத்தின் கீழ், பயனாளிக்கு மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் திங்கள்கிழமை வழங்கினார்.
சங்கராபுரம் வட்டம், சீர்ப்பனந்தல் ஊராட்சியில் கரும்பு அறுவடை இயந்திர வாடகை மையம் அமைக்கும் பயனாளிக்கு மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை - 1 மற்றும் வேளாண் பொறியியல் துறை இணைந்து உயர் தொழில்நுட்ப கரும்பு அருவடை இயந்திரத்தை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சங்கராபுரம் வட்டம், பிரம்மகுண்டம் ஊராட்சியைச் சேர்ந்த பயனாளிக்கு ரூ. ஒரு கோடியே 29 லட்சத்து 14 ஆயிரத்து 516 மதிப்பிலான உயர் தொழில்நுட்ப கரும்பு அறுவடை இயந்திரத்தை ரூ.47 லட்சத்து 8 ஆயிரத்து 190 மானியத்தில் பயனாளிக்கு மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை -1) அனுசுயாதேவி, வேளாண் பொறியியல் துறை விழுப்புரம் செயற்பொறியாளர் சுதாகர், கள்ளக்குறிச்சி உதவிச் செயற்பொறியாளர் குமாரகணேஷ், மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை - 1 தலைவர், அரசு, வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.