கள்ளக்குறிச்சியில் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடையில் இருசக்கர வாகனங்களுக்கு காற்று நிரப்பும் கம்ப்ரஸர் வெடித்ததில் கடையின் உரிமையாளர் காயமடைந்தார்.
கள்ளக்குறிச்சியில் சங்கராபுரம் சாலையில் கோட்டைமேடு பகுதியில் வளையாபதி (55) என்பவர் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை நடத்தி வருகின்றார்.
சனிக்கிழமை காலை கடையில் இருந்த இரு சக்கர வாகனங்களுக்கு காற்று நிரப்புரம் கம்ப்ரஸர் திடீரென வெடித்தது. இதில் அருகில் இருந்த வளையாபதி வெளியில் தூக்கி வீசப்பட்டார். மேலும், கடையின் மேற்கூரை சிமென்ட் ஓடுகள் சிதறின. அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்தனர்.
காயமடைந்த கடையின் உரிமையாளரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக அவர் சேலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.