மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் ஆட்சியர் இல.சுப்பிரமணியன் பணிகள் குறித்தும், ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது பற்றியும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், பாண்டியங்குப்பம் ஊராட்சியில் தெருவிளக்குகள் எரிகிறதா, குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறுகிறதா எனவும் கேட்டறிந்தார்.
பாரத பிரதமரின் கிராம இணைப்புச் சாலைகள் திட்டத்தின் கீழ், ரூ. 86.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டார்.
பின்னர், நமச்சிவாயபுரம் ஊராட்சியில், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.1.16 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கல்வரப்பு, மண்வரப்பு கட்டும் பணியையும் பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து ரூ. ஒரு லட்சத்து 54 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சிக் குழியை ஆய்வு செய்தார்.
அதனையடுத்து தொட்டியம் ஊராட்சியில் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுகிறதா, தெருவிளக்குகள் எரிகிறதா என்று மக்களிடம் கேட்டறிந்தார். பின்னர், கழிவறைகள் கட்டும் பணியையும், தொகுப்பு வீடுகள் பழுது நீக்கம் செய்வதையும் பார்வையிட்டார்.
மேலும், ஒவ்வொரு ஊராட்சியிலும் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர் நித்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேல்முருகன், துரைசாமி, ஒன்றிய பொறியாளர்கள் சித்ரா, ஜெயந்தி, முகிலன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஐயப்பன், ஜெகந்நாதன், கௌசல்யா, ஒன்றிய மேற்பார்வையாளர்கள் செந்தில்நாதன், முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.