விழுப்புரம் மாவட்டத்தில் அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று தொல்லியல் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் புராதானப் பொருள்கள் ஏராளமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், கண்டெடுக்கப்பட்டும் வருகின்றன. இவற்றைப் பாதுகாக்க மாவட்ட தலைநகரான விழுப்புரத்தில், அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அருங்காட்சியகம் அமைப்பு கூட்டமைப்பினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய கோரிக்கை மனுவை, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட ஆட்சியர், தொல்லியல் துறை ஆணையர் ஆகியோரிடம் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, தற்போது தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
விழுப்புரம் மாவட்ட அருங்காட்சியகம் அமைப்பு கூட்டமைப்பினர், அதன் ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் தலைமையில், வெள்ளிக்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் க.பாண்டியராஜனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது, தொன்மை வாய்ந்த விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில், அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அருங்காட்சியகம் அமைக்க, மாவட்ட ஆட்சியர் தீவிர ஆர்வமும் காட்டி வருவதாகவும், தமிழக அரசு அருங்காட்சியகம் அமைப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். மனுவைப் பெற்ற அமைச்சர் பாண்டியராஜன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
சென்னையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் அண்ணாதுரை, விழுப்புரம் தமிழ் இளைஞர் கூட்டமைப்பு கோ.பாபு, தமிழ்க்குடி மகன், பாலா, கரிகால சோழன் பசுமை மீட்புப் படை ஒருங்கிணைப்பாளர் அ.அகிலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.