கள்ளக்குறிச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டில் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி ராமச்சந்திரன் நகர் 5ஆவது குறுக்குச் சாலையில் வசிப்பவர் அன்பழகன் (72), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் ஜோதிடம் பார்ப்பதற்காக கடந்த 19ஆம் தேதி மனைவி தனபாக்கியத்துடன் வெளியூருக்குச் சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.