மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
 இந்தக் கோயிலில் பங்குனி உத்திர விழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 கடந்த 15-ஆம் தேதி வெள்ளி நாக வாகன உற்சவமும், 16-ஆம் தேதி தங்கமயில் வாகன உற்சவம், 19-ஆம் தேதி இரவு திருக்கல்யாணமும் வெள்ளிக்குதிரை வாகன உற்சவமும் நடைபெற்றது.
 விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தையொட்டி, புதன்கிழமை காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு தேன், பன்னீர், பால், இளநீர், சந்தனத்தால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
 அப்போது, கூடியிருந்த பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டபடி சுவாமி தரிசனம் செய்தனர். காலை 5.45 மணியளவில் தங்கக் கவச அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் தேரில் சுவாமி எழுந்தருளினார்.
 20-ஆம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கிவைத்தார்.
 தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மலைப் பாதையில் தேரை வடம் பிடித்து இழுத்தனர். காலை 7.10 மணியளவில் தேர் நிலைக்கு வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து, உற்சவருக்கு நறுமணப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
 பக்தர்கள் பால், பன்னீர் மற்றும் புஷ்ப காவடி எடுத்தும், பெண் பக்தர்கள் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் அங்கபிரதட்சணமும் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் 20-ஆம் பட்டம் சுவாமிகள் செய்திருந்தார்.
 திண்டிவனம் டி.எஸ்.பி. கனகேஸ்வரி தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 விழுப்புரம், திண்டிவனம், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com