சிதம்பரத்தில் கஞ்சா வைத்திருந்ததாக, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் உதவி ஆய்வாளர் ரங்கராஜ் ஓபி பிரதான சாலைப் பகுதியில் வியாழக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை வழிமறித்து சோதனையிட்டார். அவர்களிடம் தலா 350 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெயவந்தது. விசாரணையில் அவர்களில் ஒருவர் ரூவாண்டோ நாட்டைச் சேர்ந்த ஸ்பெலைன் மகன் ஷேமான்சி (26) எனவும், சிதம்பரம் அண்ணாமலைநகர் கோவிந்தசாமி நகரில் தங்கியிருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பட்டப் படிப்பு பயின்று வருவதும் தெரியவந்தது. மற்றொருவர் தெற்கு சூடான் நாட்டை சேர்ந்த டோக்கா மக்கன் பக்ஹிட் (23) எனவும், இவர் அண்ணாமலைநகர் ஓபி பிரதான சாலைப் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளாதாரம் படிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, 2 மாணவர்களையும் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.