இறையாண்மை என்பது யாதெனில்...? (பாகம்-2)

இறையாண்மை என்பது யாதெனில்...? (பாகம்-2)

இறையாண்மை அரசின் மூலக்கூறுகளில் முக்கியமானதாகும். இறையாண்மை இன்றி அரசு செயல்பட முடியாது. இறையாண்மை தான் அரசை இதர சங்கங்களில் இருந்து உயர்வானதாகக் காட்டுகிறது. இறையாண்மை என்கிற கருத்தை அறிமுகப்படுதியப் பிறகுதான் தற்கால அரசு முழுமை பெற்றதாகக் கருதப்படுகிறது.

இறையாண்மை, தற்கால அரசியலில் முக்கியத்துவம் பெற்றாலும் அரசியல் அறிவியலின் தந்தை என்று கருதப்படும் அரிஸ்டாட்டில் காலத்தில் இருந்தே நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அரிஸ்டாட்டில், இறையாண்மையை அரசின் “உயர்வான அதிகாரம்” என்று கூறியிருக்கிறார். 

இடைக்காலத்தில் ரோமன் சட்ட வல்லுனர்களும் இந்த கருத்தை அதிகமாக அறிந்திருந்தனர். ஆனால் ஜீன் போடின் என்பவர் தான் தன்னுடைய “குடியரசைப்பற்றிய ஆறு நூல்கள்” என்ற நூலில் இறையாண்மை என்ற கருத்தை முதன்முதலாக முறைப்படியாக பயன்படுத்தினார்.

பொருள், தன்மை மற்றும் விளக்கங்கள்

இறையாண்மை என்ற சொல்லானது லத்தின் மொழியில் `சூப்பரானஸ்' என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அதன் பொருள் “உயர்வானது” என்பதாகும். இறையாண்மையின் முழுமையான பொருளை அறிந்து கொள்வதற்கு அதுகுறித்து அரசியல் அறிஞர்கள் பலர் கூறியுள்ள விளக்கங்கள் உதவியாக இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.

ஜீன் போடின்,
இறையாண்மை என்பது குடிமக்களின் மீது சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாத, தொடர்ந்து செலுத்தப்படும் உயர்வான அதிகாரம். அதனை அரசு பயன்படுத்துகிறது.

பொல்லாக்,
இறையாண்மை என்பது உயர்வான அதிகாரம், அது தற்காலிகமானதோ, மற்றவர்களுக்கு அளிக்கக்கூடியதோ, ஒரு சில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதோ கிடையாது. உலகில் வேறு எந்த அதிகாரத்துக்கும் பதில் அளிக்கக்கூடியதோ, மாற்றக்கூடியதோ அல்ல என்பதாகும்.

பர்ஜர், 
இறையாண்மை என்பது முழுமையானது. வரையறை இல்லாத அதிகாரத்தை மக்களின் மீதும் மற்றும் உள்ள சங்கங்களின் மீதும் செலுத்தக் கூடியதாகும், மக்களிடம் இருந்து பணிவைப் பெறுவதற்கான முழு அதிகாரத்தையும் பெற்றிருக்கிறது.

டி.எஃப்.ரசல்,
இறையாண்மை என்பது அரசியல் சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாத, பலம் வாய்ந்த, உயர்வான அதிகாரத்தை குறிப்பதாகும்.

லாஸ்கி, 
இறையாண்மை என்பது சட்டப்படியாக, தனிமனிதர்களின் மீதும் அல்லது குழுக்களின் மீதும் செலுத்தப்படும் அதிகாரமாகும். இது மக்களை பணிய வைக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது.

மேலே கூறப்பட்ட விளக்கங்களில் மாறுபாடுகள் இருந்தாலும், இறையாண்மை என்பது உயர்வான அதிகாரம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இறையாண்மையின் அடிப்படைக் கருத்தானது, அதிகாரம், சட்டம் இயற்றுவது, கட்டளை பிறப்பிப்பது, அரசியல் முடிவுகளை எடுப்பது, தனி நபர்கள் மற்றும் உள்ள இதர சங்கங்களையும் தன் ஆட்சி எல்லைக்குட்பட்டவர்கள் மேல் செலுத்துவதாகும்.

இறையாண்மையை இரண்டு விதமாக பிரிக்கலாம். அவை,

அ) உள் இறையாண்மை
அதிகாரத்தைப் பயன்படுத்துபவர் உள்நாட்டில் இருக்கும் தனி நபர்கள் மற்றும் சங்கங்களின் மீது அதிகாரத்தை செலுத்த அதிகாரத்தை பெற்றவர் ஆவர்.

ஆ) வெளி இறையாண்மை
அதிகாரத்தை செலுத்துபவர்கள் மீது இதர நாட்டவரோ அல்லது சர்வதேச சங்கங்களோ அதிகாரத்தை செலுத்தாமல் சுயமாக செயல்படுவதாகும். தற்கால அரசானது நாட்டின் உள்விவகாரங்களில் உயர்வான அதிகாரத்தையும், மற்ற வெளிநாட்டு அரசாங்கத்தின் கட்டுபாடு இல்லாமலும் இருப்பதாகும்.

இறையாண்மையின் தன்மைகள்

1. சட்ட அடிப்படையில் இறையாண்மை முழுமையானது.
2. இறையாண்மை நிலையானது. அரசு இருக்கும் வரையில் இறையாண்மையும் இருக்கும். அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும் போது இறையாண்மை அழிந்து விடுவதில்லை. ஆனால், அரசாங்க அதிகாரத்தைப் பெறுபவர்களிடம் கொடுக்கப்படுகிறது.
3. அடுத்து அரசின் இறையாண்மையானது அரசு எல்லைக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் பொருந்துவதாகும்.
4. இறையாண்மையை மாற்ற இயலாது. அரசு அழிந்தால் தான் இறையாண்மையும் அழியும்.
5. கெட்டல் (Gettel) அவர்களின் கதிருத்துப்படி, “இறையாண்மை முழுமையாக இல்லாவிட்டால் அரசு இருக்க முடியாது. இறையாண்மையை துண்டுபோட்டால் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசு இயங்குவது போன்றதாகும்”.

ஆனால் கூட்டாட்சி என்ற கருத்து தோன்றியவுடன், டாக்குவில், வீட்டன் மற்றும் கேலக் போன்ற அறிஞர்கள் இரண்டு இறையாண்மைகள் இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளார்கள். இறையாண்மை பிரத்தியேகமானது. அரசு மட்டும் தான் இறையாண்மை அதிகாரத்தைப் பெற்று சட்டப்படியாக மக்களைப் பணிய வைக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது. 

இறையாண்மையின் அனைத்து தன்மைகளும் சட்ட இறையாண்மை என்ற கருத்துக்கும் வித்தியாசமானதாகும். அவை முழுமையான முடியாட்சியினால் பிரதிபலிக்கப்படுகிறது. மக்களாட்சி, கூட்டாட்சி, பன்மை மற்றும் அரசியலமைப்பின்படி அமையாத அரசாங்கங்களில், இறையாண்மை அதிகாரம் எவற்றில் அல்லது எங்கு இருக்கிறது என்பதைக் கண்டறிவது கடினமாகும்.

இறையாண்மையின் வகைகள்

இறையாண்மை பல்வேறு வகைப்படும். அதன் இருப்பிடத்தைப் பொறுத்து அவை வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பெயரளவிலான இறையாண்மை:

பெயரளவிலான இறையாண்மை என்பது பெயரளவில் மட்டுமே உள்ளதாகும். இது மன்னரின் அல்லது அரசரின் செயல்படுத்தப்படாத அதிகாரத்தைக் குறிப்பதாகும். கொள்கையளவில் அரசர் இன்றும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார். ஆனால், நடைமுறையில் இறையாண்மை அதிகாரம் மற்றவராலோ அல்லது பலராலோ செயல்படுத்தப்படலாம். பெயரளவு இறையாண்மை என்பது அதிகாரத்தின் அடையாளமாகவே மட்டும் இருக்கும். பெயரளவுக்கான இறையாண்மை அதிகாரம் உடையவராக பிரிட்டன் நாட்டு அரசர் உள்ளார். அரசர் பெயரளவிற்கான அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார். அவர் உண்மையான இறையாண்மை அதிகாரம் செலுத்தவில்லை. உண்மையான அதிகாரங்கள் அனைத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றால் செயல்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் குடியரசுத் தலைவர் பெயரளவிலான இறையாண்மையையும் கேபினட் அமைச்சர்கள உண்மையான அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார்கள்.

உண்மை நிலை (De Facto) மற்றும் சட்ட நிலை (De Jure):

உண்மைநிலை இறையாண்மை என்பது ஒருவர் சட்டப்படியாகவும் அல்லாமல் மற்றும் அரசியலமைப்பு படியும் ஆதரவு இல்லாமல் ஆட்சி செலுத்துவதை கூறலாம். சட்டரீதியான இறைமை என்பது சட்டத்தின் மூலமாக அங்கீகாரம் மற்றும் அரசியலமைப்புப்படி பெற்றுள்ள அதிகாரமாகும். புரட்சியின் மூலமாக ஆட்சியில் மாற்றம் ஏற்படும் சூழ்நிலையில் உண்மைநிலை இறையாண்மையும் சட்டரீதியான இறையாண்மையும் காண முடியும். உதாரணமாக இத்தாலியில் புரட்சியின் மூலமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது சட்டரீதியாக ஆட்சியிலிருந்த விக்டர் இம்மானுவேல் அதிகாரம் செலுத்த முடியவில்லை. ஆனால், புரட்சியின் மூலமாக ஆட்சியை பெற்ற முசோலினி உண்மைநிலை இறையாண்மையைப் பெற்றவராக கருதப்பட்டார். தற்காலத்தில் புரட்சியின் மூலமாக ஆட்சியைப் பிடித்தவர்கள் அனைவரையும் உண்மைநிலை இறையாண்மைக்கு உதாரணமாகக் கூறலாம். அவர்கள் தங்களுடைய அதிகாரத்தை நியாயப்படுத்த பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர். பொதுவாக உண்மைநிலை இறையாண்மையும், சட்டநிலை இறையாண்மையும் தொடர்ந்து குறுகிய காலத்திற்கு மட்டுமே செயல்படுகின்றன. உண்மைநிலை இறையாண்மையாளர் சட்டநிலை இறையாண்மையாளராக மாறுவதற்கு அனைத்து முயற்சிகைளயும் செய்கிறார். இறுதியாக உண்மைநிலை இறையாண்மையும் சட்டநிலை இறையாண்மையும் ஒன்றோடொன்று சேர்ந்தேச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால், இரு இறையாண்மையாளர்களும் மோதும் சூழ்நிலை உருவாகும். உண்மைநிலை இறையாண்மை அதிகாரத்தை சட்டநிலை இறையாண்மை அதிகாரமாக மாற்ற புதிய சட்டங்கள் இயற்றப்படும்.

சட்டம் மற்றும் அரசியல் இறையாண்மை:

அரசியல் இறையாண்மைக்கும் சட்ட இறையாண்மைக்கும் சில சமயங்களில் வேறுபாடு காணப்படுவது உண்டு. சட்ட இறையாண்மையைப் பெற்றவர் முழுமையானவராகவும், சர்வ வல்லமை பெற்றவராகவும் இருப்பார். தன்னுடைய விருப்பப்படி செயல்படுவார். இறையாண்மையாளரின் விருப்பமே சட்டமாகும். அதனை யாரும் கேள்வி கேட்க முடியாது. குடிமக்களுக்கு இறையாண்மையாளரே உரிமைகளை அளிக்கிறார். அவருக்கு எதிராக எவரும் செயல்பட முடியாது. மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையை இறையாண்மையை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். சட்ட இறையாண்மையானது பின்வரும் தன்மைகளைப் பெற்றிருக்கிறது.

1. சட்ட இறையாண்மையானது எப்போதும் தெளிவானது மற்றும் முடிவானது.
2. சட்ட இறையாண்மையானது தனிமனிதனிடமோ அல்லது குழுவிடமோ இருக்கலாம்.
3. தீர்க்கமாக அமையப் பெற்றது - சரியாக சொல்லப்பட்டிருப்பது, அது சட்ட பூர்வமானது.
4. குடிமக்களுக்கு அளிக்கப்பெற்றுள்ள உரிமைகள் சட்ட இறையாண்மையின் கொடையாகும்.
5. சட்ட இறையாண்மையின் மூலமாக அரசின் கதிருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகிறது.
6. சட்ட இறையாண்மையானது முழுமையானது. அதை யாரும் கேள்வி கேட்க
முடியாது.

பிரிட்டன் பாராளுமன்றத்தைச் சார்ந்துள்ள அரசர் சட்ட இறையாண்மை பெற்றவர் ஆவா. அமெரிக்காவில் அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தும் அதிகாரம் பெற்றதாக சட்ட இறையாண்மை கருதப்படுகிறது. சட்ட இறையாண்மைக்குப் பின்னால் ஒரு அதிகாரம் இருக்கிறது, அது சட்டத்துக்கு தெரியாது. அதுதான் அரசியல் இறையாண்மை. நடைமுறையில் முழுமையானதும் வரையறை இல்லாததுமான சட்ட இறையாண்மை எங்கும் இல்லை.

ஒரு சர்வாதிகாரி கூட சுயேட்சையாகவும் பிரத்தியேகமாகவும் செயல்பட முடிவதில்லை. சட்ட இறையாண்மையானது பல்வேறு செல்வாக்குகளால் உருவாக்கப்படுகிறது. ஆனால், அது சட்டத்துக்கு தெரியாது. இந்த அனைத்து செல்வாக்குகளும் சட்ட இறையாண்மைக்கு பின்னால் மறைந்திருக்கக் கூடியதாகும். அதுவே அரசியல் இறையாண்மை எனப்படுகிறது. பேராசிரியர் கில்கிரிஸ்ட் கதிருத்துப்படி "அரசியல் இறையாண்மை என்பது சட்ட இறையாண்மைக்கு பின்னால் இருந்து செல்வாக்கைப் பயன்படுத்தக் கூடியதாகும்". 

அரசியல் இறையாண்மை என்பது சட்டத்துக்கு தெரியாது. தற்கால பிரதிநிதித்துவ மக்களாட்சியில் அரசியல் இறையாண்மை என்பது மக்களையோ அல்லது தேர்தலில் வாக்களிப்பவர்களையோ அல்லது பொதுக் கருத்தையோ அடையாளமாகக் கொண்டது. அரசியல் இறையாண்மைக்கு எதிராக சட்ட இறையாண்மை செயல்பட முடியாது. டைஸி என்றவரின் கூற்றுப்படி, "சட்ட இறையாண்மை தலை வணங்குகிற ஒரு அமைப்பு, சட்டவல்லுனர்களால் அங்கீகாரம் செய்யப்பட்ட ஒரு அமைப்பு இருக்கிறது. அதற்கு அரசில் உள்ள குடிமக்கள் அனைவரும் கீழ்படிகிறார்கள், அதுவே அரசியல் இறையாண்மையாகும்". அரசியல் இறையாண்மைக்கு சரியான விளக்கம் சொல்வதில் குழுப்பம் நீடிக்கிறது. அது தெளிவற்றது, தீர்மானிக்க முடியாதது, துல்லியமாக இருப்பிடத்தை கூறமுடியாது. சில அறிஞர்கள் சட்ட இறையாண்மையையும் அரசியல் இறையாண்மையையும் பிரித்துக் கூற முடியாது எனக்கூறுகிறார்கள். ஏனென்றால் இறையாண்மையை பிரிப்பது என்பது நடைமுறையில் முடியாததாகும்.

மக்கள் இறையாண்மை:

ஒரு அரசில் இறையாண்மை அதிகாரம் மக்களிடத்தில் இருப்பதை மக்கள் இறையாண்மை எனலாம். இந்த கொள்கையானது ரூசோவால் சொல்லப்பட்டு பின்னாளில் பிரெஞ்சு புரட்சியின் முக்கிய கோரிக்கையாக அமைந்தன. மக்கள் இறையாண்மையின் தத்துவத்துவமானது மக்கள் தான் இறையாண்மை அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதாகும். மக்கள் தான் சரியா, தவறா என்பதை நிர்ணயிக்கிறார்கள். இயற்கை சட்டத்தினாலோ, தெய்வீக சட்டத்தினாலோ மக்கள் கட்டுப்படுத்தப்படுவதில்லை. அரசாங்கம் மக்களின் நன்மைக்கான ஒரு கருவியாக செயல்படுகிறது. அது மக்களுக்கு நேரடியாக பொறுப்பானதாகும். நாட்டில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலேயே அதிகாரத்தை செலுத்த வேண்டும். மக்களின் கருத்தை ஒதுக்கிவிட முடியாது. மக்கள் இறையாண்மைதான் தற்கால மக்களாட்சியின் அடிப்படையாக இருக்கிறது.

தொடரும்..

Lr. C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com