மத அரசியல்-41: ஆசீவகம்-ஆசு மருத்துவம்

மத அரசியல்-41: ஆசீவகம்-ஆசு மருத்துவம்

ஆதி தமிழனின் மருத்துவம் என்பது முழுக்க முழுக்க ஓர் இயற்கையே ஆகும் எவ்வளவோ பெரிய நோய்களுக்கு எல்லாம் மூலிகையிலேயே மருத்துவம் செய்து வந்துள்ளனர். மருத்துவக் கலையில் தேர்ந்தவர்களாகவும் அறுவை சிகிச்சை முதற்கொண்டு மருத்துவத்தில் அனைத்தையும் செய்யக் கூடியவர்களாகவும் இருந்தனர்.

ஆசு / சித்த மருத்துவம் (Asu / Siddha Medicine)

காடுகளிலும் குகைகளிலும் திரிந்து வாழ்ந்த ஆதிமனிதனுக்கு  இடி மின்னல், புயல், நில நடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களையடுத்துப் பேரச்சம் தந்தவை வனவிலங்குகளும், தொற்று நோய்களும்தான். மாந்தரினம் அறிவிலும் அறிவியலிலும் முன்னேறிய போது நோய்களுக்கான தடுப்பு மருத்துவம் பற்றியும், வந்த நோய்களுக்குத் தீர்வு காணும் முறை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியதே மருத்துவத்தின் தொடக்கக் காலமாகும்,  குமரிக் கண்டத்துத் தமிழன் தான் உலகின் முதல் முதலுதவிப் பெட்டியைக் கண்டுபிடித்தான் என்ற உண்மை நம்மில் பலருக்கு இன்னும் தெரியாது. ஓர் மாந்தரினம் முதலுதவிப் பெட்டியைப் பல்லாயிரம் ஆண்டுளாக வீடுகள் தோறும் வைத்திருந்ததென்றால். உலகில் முதன்முதலாக மருத்துவ அறிவியலை உருவாக்கி வளர்த்ததே அந்த மொழியினம் தான் என்பதும் மறுக்கப்படவியலாததாகும்,  ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முதலுதவிப் பெட்டி வைப்பதென்றால் அந்த இனம் மருத்துவ அறிவியலில் எவ்வளவு செம்மையான நிலையில் இருந்திருக்கும். உலகில் முதன்முதலாக முதலுதவிப் பெட்டியைப் பயன்படுத்தியவர்கள் ஆசீவக மரபினரே.

முதலுதவிப் பெட்டியும், பயன்பாடும் (First Aid Box and Utility)

1. முதலுதவிப் பெட்டியில் சில மிளகாய்கள் ஒரு கயிற்றில் கட்டப்பட்டிருக்கும், ஒருவரைப் பாம்பு கடித்து விட்டதென்றால் இதிலிருந்து ஒரு மிளகாயைச் சுவைக்கத் தருவர், அதன் சுவையைக் கொண்டு எந்தப் பாம்பு அவரைக் கடித்ததென்று அறிந்து கொள்ளலாம் (மிளகாய் புழக்கத்திற்கு வருமுன் இதற்குப் பதில் உப்புக்கல் வைக்கப்பட்டிருந்தது, பிற்காலத்திலேயே மிளகாய் பயன்படுத்தப்பட்டது, உப்பும் இவ்வாறே பயன்படும்).
2. படிகாரம் ஒரு துண்டு இருக்கும். பாம்புக் கடிபட்டவருக்குப் படிகாரம் கொஞ்சம் தூள் செய்து வாயில் போட்டால் பாம்பு விஷம் நீங்கும்.
3. ஓர் கம்பளிக் கயிறும் அதனுடன் இருக்கும், பாம்பு நஞ்சைக் கயிறு கட்டி இறுக்க இது உதவும்.
4. ஓர் குமட்டிக்காய் இதனுடன் இருக்கும், உணவு நஞ்சினால் வயிறு உப்பிசம் கண்டால் உடனே இக்காயை நறுக்கி உள்ளுக்குத் தரப் பேதிகண்டு உணவுநஞ்சு முறிக்கப்படும்.
5. இதனுடன் எலுமிச்சம் பழமும் இருக்கும், மயக்கம், ஆராட்டம், வாந்தி கண்டவருக்கு இதன்சாற்றினைப் பிழிந்து தருவர்.
6. இதனுடன் ஒரு சோற்றுக் கற்றாழைச் செடிமிருக்கும், இச்செடி எளிதில் ஈரம் இழக்காது வெறும் காற்றிலேயே வளரும், வெப்பச் சூலையினால் வயிறு இழுத்துப்பிடித்துக் கொண்டால் இக்கற்றாழையின் மடலிலுள்ள சோற்றினைக் கொடுத்தால் உடனே சரியாகிவிடும்.
7. இதனுடன் ஒரு சங்குப் பாலாடையும் இருக்கும், ஏனெனில் மூலிகைகளின் சாற்றினை இதில் பிழிந்து நோயாளியின் வாய்க்குள் புகட்ட இது பயன்படும், சங்குப் பாலாடையில் வைப்பதனால் எந்த மூலிகைச் சாறும் கெடாது, பக்க விளைவுகளும் ஏற்படாது (உலோகப் பாலாடைகள் வெளிக்காற்றில் வினைபுரிந்து உலோகக் களிம்பினை ஏற்படுத்தும்), 
8. வெட்டுக் காயங்கள் கட்டி போன்றவற்றை உலோகங்களால் கீறினால் உலோக ஆக்சைடுகள் கிருமித் தொற்றினை உருவாக்குமாதலால் தோலினைக் கீறி மருத்துவம் செய்ய நீளமான முட்கள் கொண்ட ஒரு குச்சியும் இதனுடன் இருக்கும். 
இப்பொழுது புரியும். இந்த முதலுதவிப்பெட்டி எது? என்று ஆம் ஒவ்வோர் வீட்டின் முன்னும் தொங்கவிடப்பட்டிருக்கும் திருஷ்டிக் கயிறுதான் அது! தன் அறிவுக்கு எட்டாதனவும், தனக்குத் தெரியாதனவும் ஆகிய செய்தினை மூடநம்பிக்கைகள். அறிவுக்கு ஒவ்வாதன என மறுக்கும் பகுத்தறிவு ஒன்று அண்மைக் காலமாகத் தலைவிரித்தாடுவதைப் பார்க்கிறோம். பதிவு பெறாத அறிவு மரபும். மிக நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் ஒரு மருத்துவமுறை ஏதேனும் சில காரணங்களுக்காகக் கையாளப்பட முடியாதபோது. அதற்கு மாற்றாகப் பகரமாகக் கையாளப்படும் மருத்துவமுறை.

ஆசு-மருத்துவமுறை

”மாற்றுமருத்துவமுறை” என வழங்கப்படும், ஆனால் நம் நாட்டிலோவெனில் ஐம்பதாண்டுக் காலமாக ஆதிக்கம் பெற்ற ஓர் மருத்துவமுறைக்கு, மாற்று மருந்துவமாக. ஐம்பதாயிரம் ஆண்டு தொன்மைமிக்க மருத்துவத்தினைக் காட்டும் விந்தை நகைப்பிற்குரியதே. இன்றைய புரிதலில் உலகெங்கும் மருத்துவம் என்பது யாக்கையினை நோயிலிருந்து மீட்டு விடுவதே எனும் பொருள்கொண்டு இயங்குகிறது, ஆனால் நமது முன்னோராகிய அறிவர்களோ மருத்துவம் என்பது நோயினை நீக்குவதோடு நில்லாமல்.

மீண்டும் அந்நோய் வாராதிருக்கச் செய்தலும் எளிதில் இறப்பினை அணுகாதுகாத்தலும் மருத்துவத்தின் பொருள்மிக்க அடிப்படை என்றனர், இத்தகு அறிவர் மரபில் இயல்மாந்தர் பின்பற்றிய மருத்துவ முறையும். அறிவர் ராவணனால் உரைக்கப்பட்டு மருத்துவர்களால் கையாளப்பட்ட சிந்தாமணி மருத்துவமுறையும் ஆசீவகத் துறவியரின் பிறங்கடைகளால் தொடர்ந்து கையாளப்பட்ட ஆசு மருத்துவமும் குறிப்பிடத்தக்கன.

ஒரு துயரர் (sufferer) தன்னை வந்தடைந்தபோதே அவர் இன்ன நோயினால் துன்புறுகின்றார் என்பதனை ஓர் ஆசு மருத்துவன் உணரவல்லான். பொதுவாகவே அறிவர் மருத்துவமாகட்டும் தமிழக நாட்டுப்புற மருத்துவமாகட்டும் அவர்கள் துயரின் கையைப் பிடித்து நாடி பார்த்தே நோயினை அறிய வேண்டும் என்றும் அவ்வாறு நாடி பார்த்து நோய் நாடுபவரே சரியான மருத்துவர் எனவும் ஒரு நம்பிக்கை மக்களிடம் இன்றும் உண்டு. ஆனால் மக்களின் நம்பிக்கைகையைப் பெறுவதற்காகவே நாடித் துடிப்பினைக் காதால் கேட்கும் கருவி போன்றவை கையாளப்படுகின்றன, அந்தக் கருவியினைக் கையாளும் முறை யாதெனில். ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு நாடித்துடிப்பு இயக்கம் நடைபெறுகிறது என்பதனை அறிய ஓரிரு மாத்திரை நேரம் கூடக்கருவினையினைப் பயன்படுத்தாமல் பத்து மாத்திரை நேரத்திற்குள் உடலில் பன்னிரண்டு முறை இடம் மாற்றிப் பரிசோதிக்கின்றனர். இதனையும் மக்கள் நம்பித்தான் வாழ்கின்றனர், இக்கருவி கண்டறியப்பட்ட போது மூன்று நிமிடத்திற்கான நாடித்துடிப்பு கணக்கிடப்பட்டு அதனை மூன்றால் வகுத்து ஒரு நிமிடத்திற்கான நாடித்துடிப்பினைக் கணக்கிட்டனர், இந்தச் சரியான நடைமுறை இப்போது பின்பற்றப்படுவதில்லை.

தமிழ் மருத்துவம் செய்வதாகக் கூறுபவர்கள் கூட எந்த நேரத்தில் தம்மிடம் நோயர் (Patient) வந்தாலும் உடனே நாடிபார்த்து மருந்து கொடுக்கின்றனர், இந்தமுறை சரியா?  எண்வகைக் குறி குணங்களைக் கொண்டு நோய் நாடலாம் என்பது மரபு, அவையாவன:

1, நாடித்துடிப்பு 
2, குரல்
3, உடல்தோற்றம்
4, கண் 
5, நா 
6, தொடுஉணர்வு 
7, நீர்க்குறி 
8, மலக்குறி

இருப்பினும் அந்த எட்டினுள் சிறப்பாகக் கூறப்படும் நாடி பார்த்தல் மக்கள் நம்பிககையைப் பெறா ஒன்று, ஆனால் மது அருந்தியவன், உறங்கி எழுந்தவன், நடந்து களைத்தவன், கடின வேலை செய்தவன். ஐம்பொறி முயங்கியவன். நீர்முழ்கி வந்தோன், அதிர்ச்சியுற்றோன், சினங்கொண்டோன், நஞ்சுண்டோன் ஆகியோரின் நாடி நடை இயல்பாயிருக்காது என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது. அதனையும் மீறி ஒருவருக்கு நாடி பார்த்துத்தான் நீங்கள் நோய் நாட  வேண்டும் என்றால் நீங்கள் நினைத்த போதெலலாம் நாடி பார்ப்பதனை அறிவர் மருத்துவம் தடை சொல்கிறது, நாடி பார்க்கப்படும் மாதங்களும் அவற்றில் நாடி பார்க்க வேண்டிய நேரமும் வரையறை செய்யப்பட்டுள்ளன.

சித்திரை வைகாசிக்குச் செழுங்கதிருந் தன்னில்
அத்தமா மானியாடி யைப்பசி கார்த்திகைக்கு
மத்தியா னத்திற்பார்க்க மார்கழி தையு மாசி
வித்தகன் கதிரோன் மேற்கில் விழுகின்ற நேரந்தானே
தானது பங்குனிக்கும் தனது நல்லாவணிக்கும்
மானமாம் புரட்டாசிக்கும் மற்று ராத்திரியில் பார்க்கத்
தேனென மூன்று நாடி தெளிவாகக் காணுமென்று
கானமா முனிவர் சொன்ன கருத்தை நீகண்டு பாரே,
என வரும் ‘வைத்திய ஆனந்தக் களிப்பில்’,

1, சித்திரை வைகாசி மாதங்களில்- கதிர்உதய நேரத்திலும்
2, ஆனி. ஆடி. ஐப்பசி. கார்த்திகை மாதங்களில்- நண்பகலிலும்
3, மார்கழி. தை. மாசி ஆகிய திங்கள்களில்- எற்பாட்டிலும்(மாலை)
4, ஆவணி. புரட்டாசி. பங்குனி ஆகிய மாதங்களில்- நள்ளிரவிலும்

நாடி பார்க்க வேண்டும் என்றொரு பழைய வரையரை இருப்பதனையே இம்மருத்துவர் பலரும் அறியார், அறிந்த சிலரோ அதனைப் பின்பற்றி நடவார். இவ்வாறு மரபொற்றி நாடி பார்க்கினும், நோயர் தம் மணிக்கட்டில் நெய்யில் நனைக்கப்பட்ட பாளைச் சீலையினைச் சுற்றிவைத்து. ஓர் மூழ்த்தம் கழித்து அதனையகற்றி விரல்களை நெட்டிப் பரித்து உள்ளங் கைகளைச் சூடு பரக்கத் தேய்ப்பித்து. அதன் பின்னர் நாடி பார்க்க வேண்டுவது மரபு, நாடி பார்த்தபின் நாடியைப் பார்த்த மூன்று விரல்களையும் தரையில் தட்டி விடுவது மரபு, யாவரேனும் பின்பற்றுகின்றனரோ? அது நடவாது, ஏனெனில் இவ்வாறு நோய்நாடுதல் நோயர்க்கு மட்டுமே நலம் பயக்கும், மருத்துவரின் நலங்கள் பயக்கப்படுமா? எனும் விரைவு கருதிய அச்சமேயாம்! 

டி பார்க்கும் வரையறை கருதி. பங்குனி மாதம் காலையில் மயங்கி விழுந்த ஒருவனை மருத்துவரிடம் கொணடு வந்தால், அவனை நான் இன்று நள்ளிரவுதான் நாடி பார்த்து மருத்துவம் செய்வேன் என்று மருத்துவர் அன்று நள்ளிரவு வரை விட்டு வைத்தால் அவன்கதி என்னாவது. இத்தகு சூழலில்தான், எண்வகைக் குறிகளாலும் அறியப்பட முடியாத நோய்நாடலைச் செய்ய ஆசு மருத்துவம் துணை செய்கிறது, மயங்கினவனின் யாக்கையின் எண்வகைக் குறிகுணங்களும் சரியான நிலையில் இலவாமாதலின். மெய்யியல், ஊழ்கம், சரஊழ்கம், புளநூல் போன்ற பயிற்சிகளைக் கைவரப் பெற்ற அறிவர்களோவெனின், அத்துயரரின் நோய் நிலையாது என்பதனை உய்த்தறிவர். யாருடைய யாக்கையினையும் தொடாது சரியான நோய் நாடல் செய்து மருத்துவத்தினை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் வல்லமை பெற்றோர் இன்றும் உண்டு என்கிறார் அறிவர் ஆதி.சங்கரன்.

இன்றைய மருத்துவ உலகம் உடலினை முதன்மைப்படுத்தி மட்டுமே மருந்தியலை வளர்க்கிறது. அது நிறைவேறாத போது உளவியிலை நோக்கித் துயரரை அனுப்பிவைக்கிறது. ஆனால், ஆசு மருத்துவமோ ஊழ்க மெய்யியிலை அடிப்படையாகக் கொண்டதாகையால் உளவியலுக்கும் உளவியல் அடிப்படையிலான நம்பிக்கை மருத்துவத்திற்கும் இம்மெய்யியல் அடிப்படையிலான தீர்வுகளை முதன்மைப்படுத்துவதாயிற்று. பிறிதொன்றும் நோக்கற்பாலதியாதெனின், இன்றுள்ள பிறமருத்துவ செய்பவனின் முடிவுக்கோ ஒப்பமருத்துவம் செய்யாது, துயரரை ஆய்வு செய்யுமோர் கருவியின் தீர்ப்புக்கொப்பவே மருத்துவம் செய்யப்படும் அவலம் கண்கூடு, இதில் பிழைப்பட உணரப்பட்ட நோய்க்குச் செய்யப்படும் மருத்துவம் துயரருக்குத் தீர்வாகாமையின், அத்துயரர் மனநலமருத்து வரை நோக்கி அனுப்பப்படும் இழிவும் வெளிப்படை, ஆசு மருத்துவம் யாக்கையின் கட்டுமானத்திற்கான மருத்துவமாக மட்டும் அமையாது, அறிவு, மனம் எனும் அந்தக் காரணியங்களையும் ஏதுக்களாக்கி. முற்றும் மலத்தினீங்கள் உடலையும். மலததினீங்கிய அறிவையும் மலத்தின் நீங்கியும் நீங்கா மனத்தினையும் ஒருங்கிணைத்தே உயிர்புள்ள ஒருங்கமைவு ஒன்றினைப் பின்வரும் பதினெட்டு மண்டலங்களாகப் பிரிக்கிறது: 

பதினெட்டு மண்டலங்கள் (18 Systems)

1. என்பு மண்டலம் 
2. என்பீற்று மண்டலம் (நகம். குருத்தென்பு) 
3. நரம்பு மண்ட லம் 
4. குருதி மண்ட லம் 
5. தசை மண்ட லம் 
6. தோல்(தொடுவுணர்) மண்ட லம் 
7. உணவுமண்ட லம் 
8. சுரப்பி மண்ட லம் 
9. கழிவுமண்ட லம் 
10. இனப்பெருக்க மண்ட லம் 
11. நிண மண்டலம் 
12. நீர்மண்டலம் 
13. திரிவாக்க மண்டலம் 
14. மனம் 
15. இன்மையிலுண்மை மண்டலம் 
16. ஆளுமை மண்டலம் 
17. வளிச்செயல்மண்டலம் 
18. மெய்யியல்மண்டலம் என்பனவாம் 

1. என்புமண்டலம் 

என்பு மற்றும் முட்டுக்கள் அம்மூட்டின் கண்ணியைந்த உயவு, கீல்கள் போன்றவை இத்தொகுதியின் கண்ணடங்கும் எலும்பு முறிவு, மூட்டு நழுவுதல், நீல்வாயுபிடிப்பு, உயவு உலர்தல் மற்றும் எலும்புப் புற்று. மசசையாக்கம் போன்ற மருத்துவங்கள் தொடர்பான செய்திகள் மற்றும் நடைமுறைகள். 

2. என்பீற்று மண்டலம் 

விரல்நுனிகள், நகங்கள் மற்றும் குருத்தென்பு இவற்றுடன்  இவற்றின் கண்ணமைந்த வர்வ ஒடி முடிவு மற்றும் இளக்கம் தொடர்பான மருத்துவம் மற்றும் தொடுவர்மம் சார்ந்த மருத்துவ முறைகள் இப்பிரிவிலடங்கும். 

3. நரம்பு மண்டலம் 

யாக்கையின் தொழிற்பாட்டிலேற்படும் முடக்கம், வர்ம சந்திகளில் ஏற்படும் தாக்குதல்கள் மற்றும் மூளையின் செயற்பாடுகள் ஆகியவற்றையும், அவை சார்ந்த மருத்துவ நடைமுறைகளும் இதன் கண்ணேயடங்கும். 

4. குருதிமண்டலம் 

இதயத்தினின்றும் குருதி பீச்சப்பட்டு யாக்கை முழுதும் பரவி மீண்டும் திரும்பி வந்து உயிர்வளியினை உள்வாங்கி மீண்டும்பரவிச் செல்லுமாதலால் இச்செயல் சார்ந்த கருவிகளும், உறுப்புக்களும் இம்மண்டலத்துள்ளடங்கும், அரத்தசோகை. அரத்தபித்தம், நஞ்சு, நஞ்சு முறிவு மருத்துவ முறைகள் இதில் அடங்கும், 

5. தசை மண்டலம் 

இயங்கு தசைகள் தவிர்த்த இயக்கு தசைகளான யாக்கையின் பலவிடத்தும் தசை நாண்களால் தொடுக்கப் பெற்றுப் பழுவென்புகளின் மீது அமையப் பெற்ற தசை மற்றும் தசை நார்கள். இவற்றின் கண் ஏற்படும் வெட்டுக்காயம், வீக்கம், புண்கள், புழுத்தாக்கு, கட்டிகள், வர்மத்தாக்கு, புரைகள் தொடர்பான மருத்துவமுறை இதில் அடங்குவதாம், 

6. புறத்தோல் மண்டலம் 

யாக்கையின் புறப்பரப்பில் போர்த்தப்பட்டுள்ள நுண்புழைகள் கொண்டதும் சிறு மயிர்க்கால்கள் கொண்டதுமான இத்தோல் மாந்தருக்குப் புறசூழலையும், தொடு உணர்வினையும், அறிவித்து நிற்பதாம், உணர்திறன் நரம்புகள், வியர்ப்பித்தல். மயிர்கள், மற்றும் பொது நிலை மருத்துவங்கள் இதிலடங்கும், 

7. உணவுமண்டலம் 

உண்ணுந் தொழிற்குதவியாய் வாய், பல், நாக்கு, தொண்டை, உணவுக்குழல், இரைப்பை,  குடல் முதலிய துணையுறுப்புக்கள் தொடர்பான மருத்துவமும், உணவு செரியாமை. குடற்புண், பசியின்மை, சுவையறிதலின்மை போன்ற மருத்துவங்களையது.

8. சுரப்பி மண்டலம் 

உணவு செரிப்பு, உடல் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு உடலின் வெப்ப நிலைச் சமன்பாடு, சிந்தனைச் செயல்பாடு ஆகியவற்றுக்கு ஆதாரமான நீர்களைச் சுரக்கவல்ல சுரப்பிகள் உமிழ்நீர்ச்சுரப்பி, இரைப்பை நீர், கணைய நீர்போன்ற சுரப்பிகளின் மருத்துவமும். நொதியங்களும் இதிலடங்கும், 

9. கழிவுமண்டலம் 

மலக்குடல், குதம், வியர்வைச் சுரப்பிகள், சிறுநாத் தடங்கள்,சிறுநீரகம், (நீரிழிவு மூலம் போன்றவையும்) தொடர்பான மருத்துவம் சார்ந்தது, 

10. இனப்பெருக்க மண்டலம் 

கருப்பை, கருவறை, பாலுறுப்புக்கள், விந்தகம், குறியுறுப்புக்கள், ஆண்மைத்தன்மை, மலடு, உறவு நாட்டம் தொடர்பான மருத்துவ முறைகள். 

11. நிண மண்டலம் 

யாக்கையின் இயக்கத்திற்குத் தேவையான வெப்பத்தினைத் தரவேண்டி உடலில் ஆங்காங்கே சேமிக்கப்படும் கொழுப்பு மற்றும்  குடல் சார்ந்த கொழுப்புகள் இவற்றின் தேக்கம் மற்றும் நீக்கம் தொடர்பான மருத்துவம், 

12. நீர்மண்டலம் 

உடலின் கண்ணாங்காங்கு நின்று பயன்படும் நீர்ப்பொருள்களையும் மற்றும் தேவையற்றுத் தேங்கிநின்று உடலைப் பருக்கச் செய்யும் நீர்பற்றியதும், சிறுநீர் தவிர்த்த உப்புத்தன்மைகளையும் பற்றிய மருத்துவம். 

13. திரிவாக்க மண்டலம் 

மிகுந்துவரும் முக்குற்றங்களால் ஏற்படும் நரை, திரை, மூப்பு மற்றும் தளர்வுகளைப் பற்றிய வளி, அழல், ஐயச் செயல்பாடுகளைக்  குறித்த மருத்துவம். 

14. மனம் 

பருப்பொருளான உடலினை ஆட்டுவிக்கும் அருவமான மனம் பற்றிய நுண்ணறிவு மருத்துவம், சித்தப்பிரமை எனப்படும், மனநோய் மற்றும் மறதி சார்புடைய மருத்துவம் மற்றும் கவனகம் சார்ந்த செய்திகள். 

15. இன்மையிலுண்மை மண்டலம் 

இன்மையாகிய கற்பனை, கனவு ஆகியவற்றில் விழிப்பு நிலையிலும், உறக்க நிலையிலும், அரையுறக்க நிலையிலும் தன் மனலோட்டங்களுக்குத் தக்கவாறு நடந்துகொள்ளல, அதனை உண்மையென நம்பும் பேராசை, மனம் சார்ந்த மருத்துவம், பொய் பேசுதுல், மூட நம்பிக்கைகள், பேராசை போன்ற பெரும்கேட்டினைச் சார்ந்த உளவியல் மற்றும் நம்பிக்கை மருத்துவம், 

16. ஆளுமை மண்டலம் 

அறிவினைக் கொண்டு தன்னாளுமை நடத்தும் திறன், தனித்திறன்கள், நற்பண்புகள், தவற்றினை உணர்ந்து கொள்ளல் போன்ற மாற்றத்தக்க மாற்றத்தினை ஏற்றுக்கொள்ளும் மனநலம் சார்ந்த தன்னை ஊக்கிக்கொள்ளும் ஊக்கம் சார்ந்த மனநல மருத்துவம், உடல், மனம், அறிவு, நன்மை, தீமை எனும் பலவற்றையும்  உணர்த்தலும், ஒருங்கிணைத்து வாழ்வதுமாய், செயல்பாடுகள் தொடர்பானது, 

17. வளி மண்டலம் 

நாசிப்புழை, வளிக்குழல், நுரையீரல், வளியறைகள் தொடர்பானதும், உயிர்வளியினை உடலுக்குள் செலுத்தத் தேவையான செயற்பாடுகளையும், அச்செயல்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் மூச்சுக்குழல் பாதையின் நோய்கள் மற்றும் மூச்சடைப்பு தொடர்பானது. இம்மட்டோடன்றி ஊழ்கம் பயிலுகையில் நாசிப் புழைகளின் கண்வளியோட்டம் மாறிச்செல்ல வேண்டிய ஒழுக்கங்கள் பற்றியது - ஒழுங்கு தப்பிய மூச்சோட்டததால் ஏற்படும் தீமைகள், மரணம் முதலியவற்றைத் தவிர்ப்பது சார்ந்த மருத்துவம்.

18. மெய்யியல்மண்டலம் 

பிற மருத்துவ முறைகள் உடலினை உயிர் வாழ்வதற்குரிய கருவியாக மட்டுமே பார்க்கின்ற வேளையில் அறிவர் மரபோ உடலினை அதற்கும் மேலாக, அதாவது வீடு பேறுடையவதற்குத் துணை நிற்கும் ஊடகமாகக் கருதியதால் ஊழ்க மெய்யியலுக்கும், வீடு பேறுடைதலுக்குமான செயற்பாடுகளுக்குத் தடையேற்படுத்தும் கரணியங்களைத் தாங்கள் நன்கு அவதானித்து அத்தடைகள் நீங்கி ஊழ்கம் பயின்று வீடுபேறடையத்தக்கதாய் உணவு மற்றும் பயிற்சி முறைகளை வகுத்தனர், இத்தகு பயிற்சிகளில் ஏற்படும் தவறுகள், தோல்விகளுக்கும், நோய்களுக்கும் காரணியமாம். வாய்ப்புள்ளதாதலின் இதனைக் களையுமுகத்தான் ஏற்படுத்திய நடைமுறைகளை உள்ளடக்கிய மருத்துவ முறைகளைக் கூறும் பகுதியாகும். இது, முதுகுத்தண்டு, மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, சுகத்திரதளம் எனும் சக்கரங்கள் அவற்றின் கண் உயிர்வளியின் தொழிற்பாடு மற்றும் அவ்விடங்களில் தோன்றும் உடல் மற்றும் மனத்திற்கான தளர்வு நிலைகளை இப்பகுதி ஆய்ந்துரைக்கும். 

அறிவர் மரபும் பதினெட்டும் மிக்க தொடர்புடையன, அறிவர் மரபினைப் பதிணெண்மராகக் காட்டும் மரபும், நம்மிடையே உண்டு , அறிவர் மரபின்படி நிலைகளும் பதினெட்டு , மேற்கணக்குநூல்களும் பதினெட்டு கீழ்க்கணக்குநூல்களும் பதினெட்டு, மெய்யியல் மண்டலத்தில் விளையும் நோய்களைப் பார்க்கில் இதுவும் பொருந்துகிறது. கீழ்மூலாதாரம் எனப்படும் முதுகுத்தண்டினின்றும் நாபியினைப் பிணைக்கும் குறிநரம்பின் மீது தோன்றும் பவுந்திரம் என்னும் கட்டியானது ஒன்றன்பின் ஒன்றாகப் பதினெட்டு கட்டிகள் தோன்றும். மேல் மூலாதாரத்துக்கும் மூச்சுக்குழலுக்கும் இணைப்புதரும் கண்டத்தில் தோன்றும் கண்ட மாலையிலும் பதினெட்டுக் கட்டிகள் தோன்றும் கண்ட மாலையிலும் பதினெட்டுக் கட்டிகள் தோன்றுவதும் விந்தையாகவே உள்ள து, இவ்விரு வகைகளிலும் பதினேழு கட்டிகளுக்குள் அதனைத் தீர்க்காவிடில் பதினெட்டாம் கட்டி மாந்தற்கு இறுதியாய் அமைந்துவிடுதலும் நோக்கத்தகும்.

வலியுணரா மருத்துவம் (Anesthetic Treatment)

பிற மருத்துவ முறைகள் நம்மிடம் கலவாதபோது, கண்போன்ற நுண்ணுறுப்புகளில் தைக்கப் பெற்ற முள் போன்றவற்றை எடுக்க அப்போதும் வலியுணரா மருத்துவம் செய்யப்பட்டதென்று சொன்னால் நமக்கு வியப்பாகவே இருக்கும், அரசர்களின் படையெடுப்புக்கள் நிகழ்ந்த காலத்தே முதனாட்போரில் வாட்புண்ணுற்ற வீரர்கள் இரவு மருத்துவம் செய்துகொண்டு மறுநாள் மீண்டும் போருக்குச் செல்வர், அப்படியாயின் ஓர் இரவுப் போழுதுக்குள் அவர் தம் வலியும் வெட்டுக்காயமும் சரிப்படுத்தப்பட்டு விடும், என்ன வியப்படைகிறீர்களா? ஆம், அன்றைய மருத்துவர்கள் நத்தைச் சூரி எனும் மூலிகையின் வேரை வலியுணர்வு நீக்கியாகப் பயன்படுத்தினர், இன்று அறுவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகள் வலியுணர்வோடு மனிதனின் உணர்வு நிலை அறிவையும்  இல்லாது செய்து மயக்கமுறச் செய்கின்றன, ஆனால் பழங்கால மருத்துவ முறையில் வலிமட்டும் இராது மனிதனின் அறிவு நிலை விழிப்பிலேயே இருக்கும், மகப்பேறு காலப் பெண்களுக்கும் வலியுணரா மருந்துகள் பயன்படுத்தப்பட்டன, தீக்காயங்களின் எரிச்சலைப்போக்கவும் வலியுணரா மூலிகைகளைப் பண்டைய மருத்துவர்கள் பயன்படுத்தினர் என்பது நம் மரபு வழிப்பதிவு.

அறுவை மருத்துவம் (Surgery)

போர்க் காலங்களில் போர்வீரர்களுக்கு ஏற்படுகின்ற விழுப்புண் பெரிய அளவில் இருந்தால் அப்புண்ணை மருந்துகளால் ஆற்றுவது கடினம் என்பதை உணர்ந்து, மருத்துவ வல்லார்களால் அப்புண்கள் தைக்கப்பட்டன. அதன் பின்னரே மருந்திட்டுக் கட்டுவதும் நிகழ்ந்துள்ளது. இதுவே இன்றைய நாளிலும் நடைமுறையிலுள்ளது. இவ்வாறு, விழுப்புண்ணைத் தைக்கும் முறையைப் பதிற்றுப் பத்து குறிப்பிகிறது.

"மீன்தேர் கொட்பின் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள்ளூசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்" 

பதிற்றுப்பத்து 5: 2:1-3

நீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியில் நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளூசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது. வெள்ளூசி என்பது வெள்ளியால் செய்யப்பட்ட தையல் ஊசியாக இருக்கலாம். புதை பொருள் அகழாய்வு ஆராய்ச்சியின்படி, சிந்து, கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்திருந்த பழந்தமிழ் மக்கள், அறுவை மருத்துவத்துக்காகச் செப்புக் கத்திகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர்  என்பது தெரியவருகிறது. அறுவை மருத்துவத்துக்காகச் செம்பைப் பயன்படுத்தினால் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்னும் அறிவியல் உண்மையைப் பண்டைய தமிழர் அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகிறது.

விலங்கு' தாவர மருத்துவம் (Veterinary Medicine)

பண்டைக் காலத்துத் தமிழ் மருத்துவ முன்னோர்கள் மனிதனுக்கு உற்ற நோயைப் போக்கும் மருந்துகளையும் மருத்துவத்தையும் கண்டறிந்திருந்ததைப் போல, மனிதனுக்கு உற்ற துணையாக இருந்த விலங்குகளுக்கும் உணவுப் பொருளாகப் பயன்பட்ட தாவரங்களுக்கும் மருத்துவம் பார்த்ததுடன், அவை நோய் வராமல் பராமரிக்கவும் கற்றிருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது.

பெண் யானை கருவுற்றிருக்கும் வேளையில் வரும் நோய் ‘வயா' எனப்படும். இந்நோய்க்கான மருத்துவம் கூறப்பட்டுள்ளது. - புறநானூறு. செய்.91

கருவுற்ற யானையும் மூங்கிலின் முளையைத் தின்றால், அதன் கரு அழிந்துவிடும் என்று குறிப்பினால் உரைத்து' அம்மூங்கில் பெண்களுக்கும் கொடுத்தால் என்னவாகும் என்பதை அவரவர் முடிவிற்கே விட்டுவிடுவதைப் போல, ‘கருச்சிதைவிற்கு மூங்கில் முளை' என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

உயிர்அடக்கமும், உயிர் பிரிதலும் 

வர்ம முடிச்சுககளில் தாக்கப்பட்டோர்,  நஞ்சுக் கடியுற்றோர்,மரத்திலிருந்து கீழே விழுந்தோர், தண்ணீரில் அமிழ்ந்தோர் ஆகியோர்தம் உயிரானது உடலை விட்டுப் பிரியுமுன் சிறிது நேரம் அடங்கியிருக்கும், அதாவது உயிர்ச் செயல்பாடுகள் அடங்கிப் பிணம் போல்தோற்றுவர், ஆயினும் அவ்வுடலுக்குள் உயிர் இருக்கும், அறிவர் மருத்துவத்தில் சிறந்தோர் அவ்வுடலை ஆய்வுசெய்யும் போது விரல்களில் நெட்டிபரியாவிட்டால் உயிர் பிரிந்ததென்றும், நெட்டிபரிந்தால் உயிர் உள்ள தென்றும் அறிவர், விழியானது மேல்நோக்கியோ, கீழ் நோக்கியோ, பக்கவாட்டிலோ. ஒதுங்கிய  பார்வையாய் இருப்பின் உயிர் அடங்கியிருக்கிறதென்றும், விழி நேராகப் பார்த்தால் உயிர் பிரிந்ததாகவும். அறியலாம், அவ்வுடலினைத் தண்ணீரில் வைத்தால் நீருக்குள் ஆழ்ந்தால் உயிர் உள்ள தென்றும், நீரில் மிதந்தால் உயிர்பிரிந்ததென்றும் அறியலாம்.

இவ்வாறு உயிர் அடங்கியிருப்போரை மீண்டெழக் கூடிய நிலையில்உயிர்ப்பிக்கும் மருத்துவ முறைக்குக் குடோரி மருத்துவம் என்று பெயர், மயங்கிவிழுந்த யாருக்கேனும் முதலுதவி செய்யும் போது “சுக்கு வைத்து ஊதுகிறாயா? எனக் கேட்கும் வழக்கம் இன்றும் நம்மிடையே உண்டு , வெள்ளெருக்கம் பாலில் ஊறவைத்த சுக்கை  நன்கு அரைத்துத் தூளாக்கிக் துணியால் வடிகட்டிப் பேச்சசுரைக் குடுக்கையில் வைத்திருந்து அதனை மயங்கினவர் நாசியில் வைத்து ஊதும் குடோரி முறைகளுள் ஒன்றான மருத்துவத்தையே இது குறிக்கும்.

Reference:
அறிவர் மரபுகண்ட ஆசு மருத்துவம்_ ஆதி.சங்கரன்

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com