அரசியல் பயில்வோம்!

மத அரசியல்-27: தமிழ்நாட்டில் பௌத்த மதம் 

சி.பி.சரவணன்

கடைச்சங்க காலத்திற்குப் பின்னர்தான், அதாவது கி. பி. முதலாவது, அல்லது இரண்டாவது நூற்றாண்டுக்குப் பிறகுதான், பௌத்தமதம் தமிழ்நாட்டில் வந்திருக்கக்கூடும் என்கின்றனர். இவ்வாறு இவர்கள் கருதுவதற்குக் காரணம் யாதெனில், கடைச்சங்க நூல்களில் பௌத்தமதத்தைப்பற்றிக் கூறப்படாததுதான். ஆனால், இவர்கள் கருத்து தவறெனத் தெரிகின்றது. பௌத்த மதத்தைப்பற்றிய குறிப்புகள் கடைச்சங்கத் தொகை நூல்களுள் காணப்படவில்லையாயினும், அச்சங்க காலத்து நூல்களில் காணப்படுகின்றன. அதாவது, கடைச்சங்க காலத்து நூல்களாகிய மணிமேகலை சிலப்பதிகாரங்களில் இந்த மதத்தைப்பற்றிக் கூறப்பட்டுள்ளன. அன்றியும், பௌத்தமதப் புலவர்கள் இயற்றிய செய்யுள்கள் கடைச்சங்கத் தொகை நூல்களில் காணப்படுகின்றன. மணிமேகலை என்னும் பௌத்த காவியத்தை இயற்றிய பௌத்தராகிய கூலவாணிகர் சாத்தனார் செய்த செய்யுள்கள் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை என்னும் நூல்களுள் தொகுக்கப்பட்டுள்ளன. இளம்போதியார் என்பவரும் கடைச்சங்க காலத்திலிருந்த பௌத்தப் புலவர். இவரது பெயரே இவர் பௌத்தர் என்பதைத் தெரிவிக்கின்றது. (போதி=அரசமரம்; அரசமரத்தின் கீழே புத்தர் ஞானம் பெற்றபடியால், பௌத்தர் அரசமரத்தைத் தொழுவது வழக்கம்.) இந்த இளம்போதியார் இயற்றிய செய்யுள் ஒன்று நற்றிணை என்னும் கடைச்சங்கத் தொகை நூலில் 72 -ஆம் பாட்டாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, கடைச்சங்க நூல்களில் பௌத்தப் புலவர்களின் செய்யுள்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றபடியினாலே, அச்சங்க காலத்துக்குப் பிறகுதான் பௌத்தமதம் தமிழ்நாடு வந்திருக்கக்கூடும் என்பது தவறாகின்றது. கடைச்சங்க காலத்திலேயே, அதாவது, கி. பி. முதலாவது, அல்லது இரண்டாவது நூற்றாண்டிலேயே பௌத்தம் தமிழ்நாட்டில் இருந்தது என்பது நன்கு விளங்குகின்றது. ஆயினும், பௌத்த மதம் தமிழ்நாட்டிற்கு முதல்முதல் எப்போது வந்தது என்னும் கேள்விக்கு இது விடையன்று.

அசோக சக்கரவர்த்தி

நற்காலமாக, அசோக சக்கரவர்த்தி எழுதுவித்துள்ள கல்வெட்டுச் சாசனங்களில் இரண்டு நமது ஆராய்ச்சிக்குப் பெரிதும் துணைசெய்கின்றன. அசோக சக்கரவர்த்தி மௌரிய மன்னர்களுள் தலைசிறந்தவர். கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் (கி. மு. 273 முதல் 232 வரையில்), தமிழ் நாட்டைத் தவிர ஏனைய இந்தியா முழுவதையும் ஒரு குடைக்கீழ் வைத்துலகாண்ட ஒப்பற்ற மன்னர். அன்றியும், இவர், பௌத்த மதத்தை மேற்கொண்டு, இந்தியா தேசத்திலும் அதற்கப்பாற்பட்ட தேசங்களிலும் இந்தப் பௌத்த மதத்தைப் பரவச்செய்தார். இவர் இந்திய தேசத்தில் வெவ்வேறிடங்களில் எழுதுவித்துள்ள கல்வெட்டுச் சாசனங்களில் இரண்டு நமது ஆராய்ச்சிக்கு உதவிசெய்கின்றன . சௌராஷ்டிர தேசத்திலுள்ள கிர்னார் நகரத்துகருகில் உள்ள பாறையொன்றில் எழுதப்பட்ட அசோக சாசனத்தில் (Edict ii) கீழ்க்கண்ட பகுதி காணப்படுகின்றது:-

'காருண்யமுள்ள தேவனாம்பிரியராகிய அரசர்பெருமானுடைய (அசோகருடைய) ஆட்சிக்குட்பட்ட எல்லாவிடங்களிலும், இவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர தேசங்களிலும், தாமிரபரணியிலும் (இலங்கை), யவன அரசனாகிய அண்டியொகஸ் ஆட்சிசெய்யும் தேசத்திலும், அதற்கப் பாற்பட்ட தேசங்களிலும் காருண்யமும் மேன்மையும் பொருந்திய அரசரால் இரண்டுவித மருத்துவ சிகிச்சைகள் ஏற்படுத்தப்பட்டன. அவை, மக்களுக்கு மருத்துவம், கால்நடைகளுக்கு மருத்துவம் என்னும் இருவகை மருத்துவ நிலையங்களாம்.'

இந்தச் சாசனத்தில், அசோக சக்கரவர்த்தி தமது நாட்டிலும், தமிழ்நாட்டிலும், ஏனைய நாடுகளிலும் மருத்துவ நிலையங்களை அமைத்தார் என்பதுமட்டும் கூறப்படுகின்றது. ஆனால், கீழ்க்கண்ட இன்னொரு சாசனத்தில், இவர் தமிழ் நாட்டில் பௌத்த மதத்தைப் பரப்பிய செய்தி காணப்படுகின்றது. பிஷாவர் நகரத்துக்கருகில் காணப்படுகின்ற இந்தச் சாசனம் (Rock Edict iii), போர்செய்து பலரைக் கொன்று அதனால் பெறும் மறவெற்றியைவிட, அறத்தைப் போதித்து அதனால் பெறும் அறவெற்றியே தமக்கு விருப்பமானது என்பதைத் தமது பிள்ளைக்கும் பேரப்பிள்ளைக்கும் அசோக மன்னர் தெரிவிக்கிற செய்தியைக் கூறுகின்றது. இவ்வாறு கூறுகின்ற இந்தச் சாசனத்தில் நமது ஆராய்ச்சிக்கு உதவிசெய்கின்ற பகுதியும் காணப்படுகின்றது. அது வருமாறு :-

தரும விஜயம் (அறவெற்றி) என்னும் வெற்றியே மாட்சி மிக்க அரசரால் (அசோக மன்னரால்) முதல்தரமான வெற்றியென்று கருதப்படுகின்றது. இந்த வெற்றி இந்த இராச்சியத்திலும், இதற்கப்பாற்பட்ட அறுநூறு யோசனைத் தூரத்திலுள்ள அண்டியொகஸ் என்னும் யவன அரசனுடைய தேசத்திலும், அதற்கும் அப்பால் டாலமி, அண்டிகொனஸ், மகஸ், அலெக்ஸாந்தர் என்னும் பெயருள்ள நான்கு அரசர்களின் தேசங்களிலும், இப்பால் தெற்கேயுள்ள சோழ, பாண்டிய, தாம்பிரபரணி (இலங்கை) வரையிலும் இந்த (அற) வெற்றி அடிக்கடி அரசரால் கைப்பற்றப்பட்டது.

இந்தச் சாசனம் கி. மு. 258 -இல் எழுதப்பட்டது. அசோக மன்னர், தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் தரும விஜயத்தை - அதாவது, பௌத்த தருமத்தைப் போதித்து அதனைப் பரவச்செய்வதால் வந்த அறவெற்றியை - கைப்பற்றினார் என்னும் செய்தியை இச்சாசனம் தெரிவிக்கின்றது. இதன் திரண்ட பொருள் என்னவென்றால், அசோக சக்கரவர்த்தி தூதர்களை (பிக்ஷக்களை) அனுப்பிப் பௌத்த தருமத்தைத் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் மற்றும் பல நாடுகளிலும் பரவச்செய்தார் என்பதே. சரித்திர ஆராய்ச்சியாளர் அனைவரும் இக்கருத்தையே இச்சானப்பகுதி விளக்குவதாகக் கூறுகின்றனர். 

அசோக மன்னர் காலத்தில்தான் பௌத்தமதம் தமிழ் நாட்டிற்கு வந்தது என்பதற்கு வேறுவிதமான புறச்சான்றும் கிடைக்கின்றது. மகாவம்சம், தீபவம்சம் என்னும் பௌத்த நூல்கள் இலங்கையில் பௌத்தமதம் வந்த வரலாற்றினையும், அந்த மதத்தை இலங்கை அரசர் எவ்வாறு போற்றிப் பாதுகாத்துவந்தனர் என்னும் வரலாற்றினையும் விரிவாகக் கூறுகின்றன. இலங்கைத் தீவு தமிழ்நாட்டை யடுத்துள்ளதாகையாலும், தமிழ்நாட்டினைக் கடந்தே இலங்கைக்குச் செல்லவேண்டுமாகையாலும், இலங்கையில் பௌத்த மதம் வந்த அதே காலத்தில்தான் தமிழ்நாட்டிலும் பௌத்தமதம் வந்திருக்கவேண்டும். ஆகவே, தீபவம்சமும் மகாவம்சமும் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம்.

பாடலீபுரம் என்னும் நகரத்தில் அசோக சக்கரவர்த்தியின் ஆதரவில் மொக்கலபுத்த திஸ்ஸ என்னும் தேரரின் தலைமையில் மூன்றாவது பௌத்த மகாநாடு கூடியதென்றும், ஒன்பது திங்கள் வரையில் அந்த மகாநாட்டில் பௌத்தமத ஆராய்ச்சி நடைபெற்ற தென்றும், மகாநாடு முடிந்தபின்னர் பௌத்த மதத்தைப் பரப்புவதற்காகப் பல பிக்குகள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர் என்றும், இலங்கைக்கு அனுப்பப்பட்டவர் அசோகரது மகனாராகிய மகிந்தர் என்பவர் என்றும், இந்த மகிந்தர் இத்திரியர், உத்தியர், சம்பலர், பத்திரசாரர், சாமனர சுமணர் என்னும் பிக்குகளைத் தம்முடன் அழைத்துக்கொண்டு இலங்கை வந்து பௌத்த மதத்தைப் பரவச்செய்தார் என்றும் இந்த நூல்கள் கூறுகின்றன. இந்த நூல்கள் கூறுகின்ற மகிந்தர் என்பவர் மகேந்திரர் ஆவர். மகேந்திரர் என்னும் பெயர் பாளி மொழியில் மகிந்தர் என்று வழங்கப்படும். இந்த மகிந்தர் அல்லது மகேந்திரர் என்பவரை இலங்கை நூல்கள் அசோகரது மகனார் என்று கூறுகின்றன. ஆனால், இந்தியாவில் உள்ள நூல்கள் இவரை அசோகரது தம்பியார் என்று கூறுகின்றன. மகனாராயினும் ஆகுக, தம்பியாராயினும் ஆகுக, இந்த மகேந்திரர் அசோகரால் அனுப்பப்பட்டவர் என்பது மட்டும் உறுதி. அன்றியும், இவருடன் இலங்கைக்கு வந்தவர்களில் ஒருவரான சாமனர சுமணர் என்பவர் அசோக மன்னரது பெண் வயிற்றுப் பேரர் என்பதும் ஈண்டுக்குறிப்பிடத்தக்கது. இந்த மகேந்திரரும் அவரைச்சேர்ந்த ஐந்து பிக்குகளும் கி. மு. 250 -இல் இலங்கைக்கு வந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுவர். இதனால், அசோக மன்னர் காலத்தில் மகிந்தர் அல்லது மகேந்திரர் என்பவரால் இலங்கைத்தீவில் பௌத்தமதம் பரவியது என்றும், அதே காலத்தில்தான் இலங்கையையடுத்த தமிழ் நாட்டிலும் இந்த மதம் முதல் முதல் வந்திருக்கவேண்டும் என்றும் துணியலாம்.

மகிந்த மௌர்யா

மகேந்திரர் தமிழ் நாட்டில் வந்து பௌத்த மதத்தைப் போதித்ததாக இலங்கை நூல்கள் கூறவில்லை. பண்டைக் காலத்தில் தமிழர் இலங்கைமேல் படையெடுத்துச்சென்று அடிக்கடி அந்நாட்டைக் கைப்பற்றி அரசாண்டு வந்தபடியாலும், அடிக்கடி தமிழருக்கும் சிங்களவரான இலங்கையருக்கும் போர் நிகழ்ந்துவந்தபடியாலும், மகேந்திரர் தமிழ் நாட்டில் பௌத்தமதத்தைப் போதித்த செய்தியை இலங்கை நூல்கள் பகைமை காரணமாகக் கூறாமல் விட்டன என்று உவின்சென்ட் ஸ்மித் என்னும் ஆசிரியர் தமது பழங்கால இந்தியா என்னும் நூலில் கூறுகின்றார். இவர் கருத்தையே ஆராய்ச்சியாளரும் ஒப்புக்கொள்ளுகின்றனர். வட இந்தியாவிலிருந்து தென் இலங்கைக்கு வந்த மகேந்திரர் கடல் வழியாகக் கப்பலில் பிரயாணம் செய்திருக்கவேண்டும் என்றும், அவ்வாறு கடல் பிரயாணம் செய்தவர் இலங்கைக்குச்செல்லும் வழியில் உள்ளதும் அக்காலத்துப் பேர் பெற்று விளங்கியதுமான காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கியிருக்கக் கூடுமென்றும், அவ்வாறு தங்கியிருந்த காலத்தில் கட்டப்பட்டவைதாம் அந்நகரத்தில் இருந்தனவாகத் தமிழ் நூல்களில் கூறப்படும் இந்திரவிகாரைகளென்றும் மேல் நாட்டுக் கீழ் நாட்டு ஆராய்ச்சியாளர் ஒருமித்தமாகக் கூறுகின்றனர்.

அசோக மன்னர் காலத்தில் அவரால் அனுப்பப்பட்ட மகேந்திரரால் தமிழ் நாட்டில் பௌத்த மதம் பரவியது என்பதை வற்புறுத்தும் மற்றொரு சான்றும் நமக்குக்கிடைத்திருக்கின்றது. யுவாங்-சுவாங் என்னும் சீன தேசத்துப் பௌத்த யாத்திரிகர் கி. பி. 640 - இல் தமிழ் நாட்டிற்கு வந்தபோது, பாண்டியநாட்டு மதுரைமாநகரின் கீழ்ப்புறத்தில் அசோகரது உடன் பிறந்தவராகிய மகேந்திரரால் கட்டப்பட்ட ஒரு பௌத்தப்பள்ளியும், இந்தப்பள்ளிக்குக் கிழக்கில் அசோக சக்கரவர்த்தியால் அமைக்கப்பட்ட ஒரு விகாரையும் இடிந்து சிதைந்துபோன நிலையில் காணப்பட்டனவாகத் தமது யாத்திரைக்குறிப்பில் எழுதியிருக்கின்றார். அன்றியும், காஞ்சீபுரத்திலும் அசோக மன்னர் கட்டிய ஒரு தூபி இருந்ததென்றும் அவரே குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால், இவர் குறிப்பிடுகின்ற பௌத்தக் கட்டிடங்களைப்பற்றித் தமிழ் நூல்கள் ஒன்றும் கூறவில்லை. 

மகேந்திரர் இலங்கையில் பௌத்த மதத்தைப் போதித்தபோது, இலங்கையரசனுடைய மாமனாரான அரிட்டர் என்பவர் அந்த மதத்தை மேற்கொண்டு துறவு பூண்டு பிக்குவானார். இந்த அரிட்டர் இலங்கை முழுவதும் அந்த மதத்தைப் பரப்புவதற்கு மகேந்திரருக்கு வேண்டிய உதவி செய்தார் என்று மகாவம்சம் என்னும் நூல் கூறுகின்றது. பின்னர் மகேந்திரரும் அரிட்டரும் சேர்ந்து பௌத்த மதத்தைத் தமிழ் நாட்டில் பரப்பியிருக்கக்கூடும். பாண்டிய நாட்டில் மதுரை ஜில்லாவில் சில குகைகள் காணப்படுகின்றன. இக்குகைகளில் பிக்குகள் படுத்துறங்குவதற்காகப் பாறையில் செதுக்கியமைக்கப்பட்ட படுக்கைகளும், அப்படுக்கையின் கீழ்ச் சில எழுத்துக்களும் காணப்படுகின்றன. இக்கற்படுக்கைகளின் அமைப்பு முதலியவை, இலங்கைத் தீவில் பௌத்தத் துறவிகள் தங்குவதற்காகப் பண்டைக் காலத்தில் அமைக்கப்பட்ட குகையிலுள்ள படுக்கைகள் முதலியவற்றின் அமைப்பை ஒத்திருக்கின்றன. பௌத்தத் துறவிகள் ஊருக்குள் வசிக்கக்கூடாதென்பது அம்மதக் கொள்கையாதலால், அவர்கள் வசிப்பதற்காக மலைப்பாறைகளில் குகைகள் அமைப்பது பண்டைக்காலத்து வழக்கம். 

இலங்கையிலும் பாண்டி நாட்டிலும் காணப்படும் இந்தக் குகைகளின் ஒற்றுமையமைப்பைக்கொண்டு இவை பௌத்தத் துறவிகள் தங்குவதற்கென அமைக்கப்பட்டவை என்றும், இப்பாண்டி நாட்டுக் குகைகளில் காணப்படும் எழுத்துக்களைக்கொண்டு (இவை அசோகர் காலத்துக் கல்வெட்டுச் சாசனங்களில் காணப்படும் பிராமி எழுத்தை ஒத்திருப்பதால்), இவை கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சி வல்லவர் கூறுகின்றனர். இவ்வாறு காணப்படும் பாண்டி நாட்டுக் குகைகளில் ஒன்று அரிட்டாபட்டி என்னும் கிராமத்துக் கருகில் இருக்கின்றது. அரிட்டாபட்டி என்னும் பெயர், இலங்கையிலிருந்து வந்து தமிழ் நாட்டில் பௌத்த மதத்தைப் பரவச்செய்ய மகேந்திரருக்கு உதவியாயிருந்த அரிட்டர் என்னும் பிக்குவை நினைவூட்டுகின்றது. இந்த அரிட்டர் என்னும் பௌத்த முனிவர் இங்குள்ள குகையில் தமது சீடருடன் வாழ்ந்திருக்கக் கூடும் என்றும், ஆனதுபற்றியே இக்குகைக்கருகில் உள்ள சிற்றூர் அரிட்டாபட்டி என்று வழங்கலாயிற்று என்றும் கூறுவர். மகாவம்சம் என்னும் நூல் மகா அரிட்டர் என்பவர் மகிந்தருடன் சேர்ந்து வெளியிடங்களுக்கு - அதாவது தமிழ்நாட்டிற்கு - சென்று பௌத்த மதத்தைப் பரப்பினார் என்று சொல்வதைப் பாண்டி நாட்டில் உள்ள அரிட்டாபட்டி என்னும் பெயரும் அங்குள்ள குகைகளும் வலியுறுத்துகின்றன.
மேலே எடுத்துக்காட்டிய சான்றுகளினாலே, தமிழ் நாட்டில் பௌத்த மதம் எந்தக் காலத்தில் வந்தது? இந்த மதத்தைக் கொண்டுவந்து இங்குப் புகுத்தியவர் யாவர்? என்னும் வினாக்களுக்கு, கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் இந்த மதம் தமிழ் நாட்டில் வந்ததென்றும், இதனை இங்குக் கொண்டுவந்து புகுத்தியவர் அசோக மன்னரும் அவரது உறவினராகிய மகேந்திரரும் மற்றும் அவரைச் சேர்ந்த பிக்குகளுமாவர் என்றும்  கண்டோம்.

பௌத்தம் தமிழ் நாட்டில் வளர்ச்சிபெற்ற வரலாறு

இந்த மதம் உலகமெங்கும் பரவுவதற்குக் காரணமாயிருந்தது சங்கம். 'சங்கம்' என்றால் பௌத்த பிக்ஷக்களின் கூட்டம். பௌத்த மதத்தில் 'மும்மணி' என்று சொல்லப்படும் புத்த, தன்ம, சங்கம் என்னும் மூன்றனுள் இம்மதத்தின் உயிர்நிலையாயிருந்தது சங்கமே. சங்கத்தின் அங்கத்தினரான தேரர்கள் நாடெங்குஞ் சென்று பௌத்த தர்மத்தை (கொள்கையை)ப் பரவச் செய்தபடியால், இந்த மதம் அந்தந்த நாட்டுமக்களால் மேற்கொள்ளப்பட்டு மேலோங்கி நின்றது.

புத்தர் நிர்வாணம் அடைந்த பிறகு, அவரைப் பின் பற்றியொழுகிய பிக்ஷக்கள் பற்பல நாடுகளிலும் சென்று இம்மதக்கொள்கையைப் பரவச்செய்தது போலவே, தமிழ் நாட்டிலும் வந்து, நகரம் கிராமம் என்னும் வேறுபாடின்றி எல்லாவிடங்களிலும் தமது மதக்கொள்கையைப் போதிப்பதையே தமது வாழ் நாட்களின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள். தமிழ் நாட்டில் ஆங்காங்கிருந்த அரசர், வணிகர், செல்வந்தர் முதலானவர்களின் பொருளுதவி பெற்று விகாரைகளையும், பள்ளிகளையும், சேதியங்களையும், ஆராமங்களையும் ஆங்காங்கே நிறுவினார்கள். மடங்களில் வாழும் பௌத்தத் துறவிகள் மருத்துவம் பயின்று, தம்மிடம் வரும் பிணியாளருக்கு இலவசமாக மருந்து கொடுத்துத் தொண்டு செய்துவந்தார்கள். அன்றியும், தமது பள்ளிகளில் பாடசாலைகளை அமைத்துச் சிறுவர்களுக்குக் கல்வியையுங் கற்பித்துவந்தார்கள். பௌத்தருக்குரிய நன்னாட்களில் நாட்டு மக்களைத் தமது பள்ளிக்கு அழைத்து, மணல் பரப்பிய முற்றங்களில் அமரச்செய்து, திரிபிடகம், புத்தஜாதகக் கதைகள், புத்தசரித்திரம் முதலான நூல்களை ஓதிப் பொருள் சொல்லியும் மக்களுக்கு மதபோதனை செய்துவந்தனர். மற்றும், குருடர், செவிடர், முடவர் முதலான வருக்கும், ஏழைகளுக்கும் உணவு கொடுத்துதவ அறச்சாலைகளை அரசர் செல்வந்தர் முதலானோர் உதவிபெற்று நிறுவினார்கள். இவ்வாறு நாட்டுமக்களுக்கு நலம் புரிந்துகொண்டே பௌத்தமதத்தின் கொள்கைகளையும் போதித்துவந்தபடியால், இந்த மதம் தமிழ் நாட்டிலும் நன்கு பரவி வளர்ந்தது.

இவையன்றியும், இந்த மதம் மேல்சாதி கீழ்சாதி என்று பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாதபடியினாலும், எக்குடியிற் பிறந்தோராயினும், அன்னவர் கல்வி அறிவுகளிற் சிறந்தோராய்த் தம் மதக்கொள்கைப்படி ஒழுகுவாராயின், அவரையுந் தங்குருவாகக் கொள்ளும் விரிந்த மனப்பான்மை கொண்டிருந்தபடியினாலும், அக்காலத்தில் சாதிப்பாகுபாடற்றிருந்த தமிழர் இந்த மதத்தை மேற்கொண்டனர் என்றும் தோன்றுகின்றது. இச்செய்திகளெலாம் தமிழ் நூல்களிலும் பிற நூல்களிலும் ஆங்காங்கே காணப்படும் குறிப்புகளைக்கொண்டு அறியலாம். பௌத்தமதம் தமிழ் நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த செய்தி, சிலப்பதிகாரம், மணிமேகலை, தேவாரம், நாலாயிரப்பிரப்பந்தம், பெரியபுராணம், நீலகேசி முதலிய நூல்களினால் அறியக்கிடக்கின்றது. 

பௌத்த சமயம் தமிழகத்தில் சிறந்து விளங்கியமை

இளம்போதியார், சீத்தலைச்சாத்தனார் போன்ற புலவர்கள் வாழ்ந்தமையும், அறவண அடிகள் போன்ற அறச்சான்றோர் இருந்தமையும், தருமபாலர் போன்ற துறவியர் கல்வியாளராகப் புகழ்பெற்றிருந்தமையும், புத்தமித்திரர், பெருந்தேவனார் போன்ற படைப்பாளர்கள் சிறப்புப் பெற்றிருந்தமையும் பௌத்த சமயத்தின் செல்வாக்கினை எடுத்துக் காட்டுகின்றன. தவிர, தமிழகத்தில் காவிரிப்பூம்பட்டினம், நாகைப்பட்டினம், காஞ்சிபுரம், மதுரை, திருப்பாதிரிப் புலியூர், பூதமங்கலம் போன்ற பழம்பெரு நகரங்களில் பௌத்த சமயம் மேலோங்கியிருந்ததை இலக்கியங்கள் மூலமும் ஆங்காங்குக் கிடைக்கின்ற சிலைகள், சாசனங்கள், கல்வெட்டுகள் ஆகியன மூலமும் அறிந்து கொள்ளலாம்.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT