மாருதி சுஸுகி நிறுவனம் தயாரித்து வரும் ஆல்ட்டோ கார்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாட்டில் மிக அதிகமாக விற்பனையாகும் கார்கள் என்ற பெருமையை அதே நிறுவனத்தின் டிஸைர் ரகக் கார்கள் பெற்றுள்ளன.
இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள ஜூலை மாத வாகன விற்பனை புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஜூலை மாதத்தைப் பொருத்தவரை, மாருதி சுஸுகி நிறுவனத்தின் டிஸைர் ரகத்தைச் சேர்ந்த 25,647 கார்கள் விற்பனையாகி, பயணிகள் வாகன விற்பனையில் முதலிடத்தைப் பெற்றன.
முந்தைய 2017-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 14,703-ஆக இருந்தது. மேலும், விற்பனை வரிசையில் முந்தைய ஆண்டின் ஜூலை மாதத்தில் டிஸைர் கார்கள் 5-ஆவது இடத்தில் இருந்தன. இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த ஆல்ட்டோ கார்கள், இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் 23,371 மட்டுமே விற்பனையாகி இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டன. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் விற்பனையான ஆல்ட்டோ கார்களின் எண்ணிக்கையான 26,009-உடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும் என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.