தங்க சிலைகளை ஏற்றுமதி செய்ய நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடவுள்கள் உருவம் பொறித்த தங்க சிலைகளை மட்டும் ஏற்றுமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 8 காரட் மற்றும் அதற்கு மேற்பட்டு 24 காரட் வரையிலும் இந்த தங்க சிலைகள் இருக்கலாம். உள்ளூர் வரிவிதிப்பு மண்டலங்களிலிருந்து மட்டும் தங்க சிலைகளை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி செய்யப்படும் கடவுள் சிலைகள் அனைத்தும் 100 சதவீதம் மத்திய அரசு மதிப்பீட்டாளரால் ஆய்வு செய்யப்படும். ஏற்றுமதி செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அதற்கான தொகை வெளிநாட்டிலிருந்து செலுத்தப்பட வேண்டும். மேலும், ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி உத்தரவை கட்டாயம் சமர்பிக்க வேண்டும். இதைத் தவிர, தங்கத்தில் கடவுள் சிலைகளை உற்பத்தி செய்யும் உண்மையான தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே இந்த ஏற்றுமதி அறிவிப்பு பொருந்தும் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.