மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டர் விற்பனை நவம்பரில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் வேளாண் உபகரணங்கள் பிரிவின் தலைவர் ராஜேஷ் ஜெஜுரிக்கர் தெரிவித்துள்ளதாவது: மஹிந்திரா நவம்பரில் 25,949 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் விற்பனையான 22,994 டிராக்டர்களுடன் ஒப்பிடுகையில் இது 13 சதவீதம் அதிகமாகும்.
உள்நாட்டு சந்தையில் டிராக்டர் விற்பனை 21,271-லிருந்து 18 சதவீதம் உயர்ந்து 25,159-ஆக காணப்பட்டது. இருப்பினும் ஏற்றுமதி, 1,723 என்ற எண்ணிக்கையிலிருந்து 54 சதவீதம் சரிவடைந்து 790-ஆக ஆனது.
பண்டிகை காலத்தையொட்டி டிராக்டர்களுக்கான தேவை சிறப்பான அளவிலேயே அதிகரித்து காணப்பட்டது. கிராமப்புற மற்றும் வேளாண் வளர்ச்சியில் அரசு அதிக கவனம் செலுத்தி அதிக தொகையை செலவிட்டு வருவதாலும், தேவை அதிகரிப்பால் முக்கிய வேளாண் பொருள்களுக்கு விலை உரிய விலை கிடைக்கும் என்பதாலும் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டிலும் டிராக்டர் விற்பனை தொடர்ந்து அமோகமாகவே இருக்கும் என்றார் அவர்.