இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்திலான சேவை வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் அறிமுகமாகும் என இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) செயலர் எஸ்.கே. குப்தா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது:
இந்திய தொலைத்தொடர்பு சேவைத் துறையில் 5ஜி அறிமுகம் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வு ஆகியவை நுகர்வோரின் மனநிலையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
இந்தியாவில் தற்போது 40 கோடி பேருக்கு நல்ல தரத்தில் இணையதள சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, அவர்கள் ஊடகம் தொடர்பான செய்திகளை டிஜிட்டல் வழிமுறையில் கையாள மிகப்பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, நுகர்வோர் தேவையை உணர்ந்து அவர்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் ஊடகங்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.