வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு 10 லட்சம் கோடி டாலரை எட்டும் என்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திரா கார்க் (படம்) சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நல்ல எதிர்காலம் கண் முன் உள்ளது. பொருளாதாரத்தில் மேன்மையான செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, பொருளாதரா வளர்ச்சி வேகமெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.
நாடு சுதந்திரமடைந்து முதல் 40 ஆண்டுகளில் நம்நாடு 3.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே மிக கடினமாக இருந்தது. ஆனால் தற்போது இயல்பாகவே 7-8 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டு வருகிறது. சாதரணமாக 8 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது நாம் அடையக்கூடியதே. இதனை தொடர்ந்து தக்கவைக்க முடியுமெனில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு 10 லட்சம் கோடி டாலரை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. இதையடுத்து, உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார மதிப்பைக் கொண்ட மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றார் அவர்.