உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஏதர் எனர்ஜி நிறுவனம் ஏதர் 450' என்ற புதிய வகை மின்சார ஸ்கூட்டரை (இ-ஸ்கூட்டர்) செவ்வாய்க்கிழமை பெங்களூரில் அறிமுகம் செய்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான தருண் மேத்தா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஏதர் எனர்ஜி ரூ.1.09 லட்சம் விலையில் ஏதர் 340' மாடல் மின்சார ஸ்கூட்டரை ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளோம்.
தற்போது மேம்படுத்தப்பட்ட அதிக செயல்திறன் கொண்ட ஏதர் 450' மாடல் மின்சார ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் விலை ரூ.1.24 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வகை ஸ்கூட்டர் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் 75 கி.மீ வரை செல்லக்கூடியது.
தற்போது பெங்களூர் நகரத்தில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இவ்வகை ஸ்கூட்டர்களின் விற்பனையை விரைவில், சென்னை, புணே நகரங்களுக்கும் விரிவுபடுத்தவுள்ளோம் என்றார் அவர்.