ஜிஎஸ்டி மிக முக்கியமான சீர்த்திருத்தம். அதன் தாக்கம் 2 காலாண்டுக்கு மட்டுமே இருந்தது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி இந்தியா பொருளாதார வளர்ச்சியின் இடையூறு என்று மத்திய ரிசர்வ் வங்கி ரகுராம் ராஜன் நேற்று (சனிக்கிழமை) தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
"எப்போதும் விமரிசிப்பவர்களும், குறை கூறுபவர்களும் இருந்துகொண்டே தான் இருப்பார்கள். அவர்கள், ஜிஎஸ்டி தான் இந்தியாவின் வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தியது என்று சொல்வார்கள்.
ஜிஎஸ்டியின் பாதிப்பு முதல் 2 காலாண்டுக்கு இருந்திருந்தாலும், அதன்பிறகு, இந்தியாவின் வளர்ச்சி 7 ஆக உயர்ந்தது. அதன்பிறகு, 7.7 ஆக அதிகரித்தது. கடைசி காலாண்டில் அது 8.2 ஆக உயரும். 2012-14 காலகட்டத்தில் 5-6 ஆக இருந்த வளர்ச்சி விகிதத்தை காட்டிலும் இது அதிகம்.
ஜூலை1, 2017-இல் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி சுதந்திரம் பெற்ற பிறகு அமல்படுத்தப்படும் மிகப் பெரிய வரி சீர்த்திருத்தம். பொருளாதார வளர்ச்சியில் வெறும் 2 காலாண்டில் மட்டும் தான் அதன் இடையூறான தாக்கம் இருந்தது.
வங்கிகளின் அமைப்பை பலமாகவே வைப்பதற்கும், இந்தியா வளர்ச்சி அடைவதற்கும் உதவ, வாராக்கடன்களை குறைக்கவேண்டும்" என்றார்.
இதில், அவர் ரகுராம் ராஜனின் பெயரை குறிப்பிடாமல் இருந்தாலும், அவருடைய விமரிசனத்துக்கு பதிலாகவே அருண் ஜேட்லியின் இந்த பேச்சு அமைகிறது.