சுரங்கம் மற்றும் பொறியியல் பொருள்கள் துறையில் காணப்பட்ட சுணக்க நிலையால், கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்திய தொழிலக உற்பத்தி வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் (சிஎஸ்ஓ) திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்தாண்டு செப்டம்பரில் தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதம் 4.1 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது. இது, நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருத்திய மதிப்பீட்டில் 4.3 சதவீதத்திலிருந்து 4.6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், செப்டம்பரில் அதன் வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது, நான்கு மாதங்களில் காணப்படாத சரிவு நிலையாகும்.
தொழிலக உற்பத்தி வளர்ச்சி கடந்த மே மாதத்தில் தான் 3.8 சதவீதம் என்ற அளவில் மிக குறைந்து காணப்பட்டது. ஜூன் மாதத்தில் இது முதல் முறையாக 6.9 சதவீதத்தையும், ஜூலையில் 6.5 சதவீதத்தையும் எட்டியிருந்தது.
ஆகஸ்ட் மாதத்தில் 7.6 சதவீதமாக இருந்த சுரங்க துறையின் உற்பத்தி வளர்ச்சி செப்டம்பரில் 0.2 சதவீதமாக பின்னடைந்துள்ளது. அதேபோன்று, பொறியியல் பொருள்கள் துறை உற்பத்தி வளர்ச்சியும் 8.7 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாக குறைந்துள்ளது.
இருப்பினும், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 3.8 சதவீதத்திலிருந்து அதிகரித்து 4.6 சதவீதமாகியுள்ளது. அதேபோன்று, மின் துறை உற்பத்தியும் 3.4 சதவீதத்திலிருந்து ஏற்றம் கண்டு 8.2 சதவீதமாகியுள்ளது.
நடப்பாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், இந்திய தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதம் 5.1 சதவீதத்தை எட்டியுள்ளது.
கடந்தாண்டில் இது 2.6 சதவீதமாக மட்டுமே காணப்பட்டது என சிஎஸ்ஓ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.