பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் இந்தியா இரண்டாவது காலாண்டில் ரூ.1,156.25 கோடி இழப்பை சந்தித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி செபிக்கு திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2018-19-ஆம் நிதி ஆண்டின் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் பேங்க் ஆஃப் இந்தியாவின் மொத்த வருவாய் ரூ.10,800.24 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் இதே கால அளவில் வருவாய் ரூ.11,600.47 கோடியாக காணப்பட்டது.
வங்கி கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.179.07 கோடியும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.95.11 கோடியும் நிகர லாபம் ஈட்டியிருந்த நிலையில் தற்போது ரூ.1,156.25 கோடி அளவுக்கு நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது. வாராக் கடன் அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம்.
வாராக் கடன் இடர்பாட்டை சமாளிக்க ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1,866.82 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.2,827.62 கோடியானது.
மொத்த வாராக் கடன் ரூ.49,306.90 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.61,560.65 கோடியாகவும், நிகர வாராக் கடன் விகிதம் ரூ.23,565.73 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.25,994.15 கோடியாகவும் இருந்தது என பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.