பொதுத் துறை நிறுவனங்களான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (ஜிஐசி) ஆகியவற்றின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பங்குச் சந்தைகளில் ஜிஐசி பங்குகள் கடந்தாண்டு அக்டோபரிலும், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் பங்குகள் கடந்தாண்டு நவம்பரிலும் பட்டியலிடப்பட்டன. இந்த நிலையில், தற்போது அந்த நிறுவனங்களின் பங்குகளை விற்க நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனங்களின் பங்கு விற்பனையை ஓஎஃப்எஸ் முறையில் நிர்வகிக்க விரும்பும் வணிக வங்கிகளும், விற்பனை தரகர்களும் தங்களது விருப்பங்களை தெரிவிக்கலாம் என முதலீட்டு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை (டிஐபிஏஎம்) வியாழக்கிழமை அறிவித்தது. மத்திய அரசின் பங்கு விற்பனை திட்டத்தில் பங்கேற்க விரும்பும் வணிக வங்கிகள் தனியாகவோ அல்லது குழுவாகவோ டிசம்பர் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என டிஐபிஏஎம் கூறியுள்ளது.
புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கிய நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் பங்கு ஒன்றை ரூ.770-ரூ.800 என்ற விலையில் விற்பனை செய்து ரூ.9,600 கோடியைத் திரட்டியது. அதேபோன்று மறுகாப்பீட்டு நிறுவனமான ஜிஐசி பங்குகள் ரூ.855-ரூ.912 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டதையடுத்து அந்நிறுவனம் ரூ.11,370 கோடியை திரட்டியது.
பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ரூ.80,000 கோடியை திரட்ட பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இதுவரையில் ரூ.15,200 கோடி மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.