ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கையகப்படுத்தப்படும் என்பதை உறுதியாக கூற முடியாது என டாடா சன்ஸ் தெரிவித்துள்ளது.
பல்லாயிரம் கோடி கடனில் மூழ்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் விருப்பம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் இது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இதனால், ஜெட் ஏர்வேஸ் பங்குகளின் விலை கடந்த ஐந்து நாட்களில் 40 சதவீதத்துக்கும் மேல் ஏற்றத்தைக் கண்டது.
இந்த நிலையில், இயக்குநர்கள் குழு கூட்டத்துக்குப் பிறகு டாடா சன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
கடன் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவது குறித்த விவகாரத்தில் முதல் கட்ட ஆலோசனைகள் மட்டுமே நடைபெற்றன.
மாறாக, அந்நிறுவனத்தை கையகப்படுத்தும் உறுதியான திட்டம் எதுவும் எங்கள் வசம் இல்லை என டாடா சன்ஸ் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.