நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி 2017-18 பருவத்தில் 2.72 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
இதுகுறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்இஏ) தெரிவித்துள்ளதாவது:
கடந்த அக்டோபருடன் முடிவடைந்த 2017-18 எண்ணெய் பருவத்தில் தாவர எண்ணெய் இறக்குமதி 2.72 சதவீதம் குறைந்து 1.5 கோடி டன்னாகியுள்ளது. கடந்தாண்டில் இது 1.54 கோடி டன்னாக காணப்பட்டது.
2017-18 பருவத்தில் முதல் காலாண்டில் தாவர எண்ணெயின் இறக்குமதி விறுவிறுப்புடன் இருந்தது. இருப்பினும், ஜூன் மாதத்தில் இறக்குமதி வரியை மாற்றியமைத்தது, வேகமான ரூபாய் மதிப்பு சரிவு, கடன் நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக, இரண்டு மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் அதன் இறக்குமதி சரிவடைந்து போனது. அதேசமயம், நான்காவது காலாண்டில் தாவர எண்ணெய் இறக்குமதி கணிசமான அளவில் அதிகரித்தது.
தாவர எண்ணெய் இறக்குமதியில் சமையல் எண்ணெய் இறக்குமதி 1.50 கோடி டன்னிலிருந்து 1.45 கோடி டன்னாக குறைந்தது. அதேசமயம், சமையல் சாரா எண்ணெய் இறக்குமதி 3.62 லட்சம் டன்னிலிருந்து 5.09 லட்சம் டன்னாக உயர்ந்தது என அந்த சங்கம் கூறியுள்ளது.