கடனில் சிக்கி தத்தளித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களை விற்று ரூ.6,100 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மூத்த உயரதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கடந்த செப்டம்பர் மாதத்தில் குறுகிய காலக் கடனாக ரூ.500 கோடியை திரட்டிக் கொள்ளும் வகையில் ஏலப்புள்ளிகள் கோரப்பட்டது. ஆனால், இறுதி நாளான செப்டம்பர் 10 வரையில் யாரும் விண்ணப்பிக்கவில்லை. எனவே, காலக்கெடுவை அக்டோபர் 31 வரையில் நீடித்தும் பலனில்லை.
இந்த நிலையில், தேசிய சிறு சேமிப்பு நிதியத்திடமிருந்து ரூ.1,000 கோடி கடன் பெற இருந்ததையடுத்து, ரூ.500 கோடி திரட்டும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடன் திரட்டும் திட்டத்தை ஏர் இந்தியா மறுசீரமைத்து நிதி ஆதாரத்தை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான 6 போயிங் 787 (டிரீம்லைனர்) விமானங்கள் உள்ளிட்ட 7 பெரிய விமானங்களை விற்பனை செய்வதன் மூலமாகவும், குத்தகைக்கு விடுவதன் வாயிலாகவும் ரூ.6,100 கோடியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.55,000 கோடி கடன் உள்ளது. இதில், மூலதன தேவைக்காக திரட்டிய கடன் ரூ.35,000 கோடியும் அடங்கும். கடன்களை தீர்க்க நிதி திரட்டும் நடவடிக்கைகளில் கடந்தாண்டு முதல் அந்நிறுவனம் போராடி வருகிறது.
ஏர் இந்தியா நிறுவனத்தில் நிதி சீரமைப்பை மேற்கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2012-ஆம் ஆண்டு நீடித்தது. அதன் அடிப்படையில், கடன் பிரச்னையிலிருந்து ஏர் இந்தியாவை மீட்டுக் கொண்டு வர 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 10 ஆண்டு காலத்துக்கு ரூ.30,231 கோடி நிதி உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது.