"ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 65 கோடியாக உயரும்'
வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர் எண்ணிக்கை 65 கோடியாக உயரும் என்று யர்னஸ்ட் யங் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதன் காரணமாக ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் வேகமான டேட்டா சேவையை வழங்க உதவுவதுடன், புதிய செயலிகளையும் பயன்படுத்துவதற்கு ஆதாரமாக அமையும். இதனால், பொதுமக்களும், வர்த்தக துறையும் அதிக அளவில் டேட்டாவை பயன்படுத்தும் ஜிகாபைட் சமூகமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் டேட்டா சராசரி பயன்பாடு 18 ஜிபியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த கால கட்டத்தில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்து 65 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022-க்குள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு லட்சம் கோடி டாலரை எட்டும் திறன் இந்தியாவிடம் உள்ளது. அப்போது கூடுதலாக 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று யர்னஸ்ட் யங் தெரிவித்துள்ளது.