சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.93,960 கோடியாக சரிவு

நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.93,960 கோடியாக சரிவடைந்துள்ளது. 
சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.93,960 கோடியாக சரிவு


புது தில்லி: நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.93,960 கோடியாக சரிவடைந்துள்ளது. 
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது: நடப்பாண்டு ஜூன் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.95,610 கோடி வசூல் செய்யப்பட்டது. ஜூலை மாதத்தில் இந்த வசூல் ரூ.96,483 கோடியாக அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில், ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.93,960 கோடியாக குறைந்துள்ளது. இதற்கு, வரி குறைப்பின் பலன்களை பெறவேண்டும் என்பதற்காக நுகர்வோர்கள் பொருட்கள் வாங்கும் திட்டத்தை ஒத்திப் போட்டதே முக்கிய காரணமாகும். ஜூலை 21-இல் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. இந்த வரிக் குறைப்பு ஜூலை 27 முதல் அமலுக்கு வந்தது. இந்த வரி குறைப்பின் பயன்கள் நுகர்வோரை சென்றடைவதற்கு காலதாமதம் ஆகியிருக்கும். வரி விகிதங்கள் குறைக்கப்பட்டதின் உண்மையான பின்விளைவுகள் அடுத்த மாதத்திலிருந்துதான் தெரியவரும். வரி குறைப்பு நடவடிக்கை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் சில நாள்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். கடந்த ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 66 லட்சமாக இருந்தது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 67 லட்சமாக அதிகரித்துள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெள்ள பாதிப்பு காரணமாக கேரளாவில் மட்டும் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நடப்பாண்டு அக்டோபர் 5-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com