பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் பால் பொருள்கள் வர்த்தகத்திலும் களமிறங்கியுள்ளதாக வியாழக்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து ராம்தேவ் மேலும் தெரிவித்ததாவது:
தயிர், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பால் பொருள்களை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்பிலும் பதஞ்சலி நிறுவனம் களமிறங்கியுள்ளது. இதுதவிர, இனிப்பு சோளம், பட்டாணி, உருளைக் கிழங்கு மற்றும் பதப்படுத்தப்பட்ட காய்கறி பிரிவிலும் ஏற்கெனவே பதஞ்சலி கால் பதித்துள்ளது.
இவ்வகை பிரிவுகள் வர்த்தகத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.500 கோடி வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் இதனை ரூ.1,000 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பதஞ்சலி பொருள்களை விற்பனை செய்வதற்கு 56,000 சில்லறை விற்பனையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில், தினமும் 10 லட்சம் லிட்டர் பால் பொருள்கள் விற்பனை இலக்கை எட்டுவதே எங்கள் முக்கிய நோக்கம். இதைத் தவிர, பாலை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு உணவுப் பொருள்களை சிறிய வகை பேக்குகளில் அடைத்தும் விற்பனை செய்யப்படவுள்ளன.
எங்களுடன் தொடர்பில் இருக்கும் கிராமப்புற விவசாயிகளிடமிருந்தே பாலை நேரடியாக கொள்முதல் செய்யவுள்ளோம். இது, இந்திய இன மாடுகளிலிருந்து கிடைக்கும் பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருள்களை ஊக்குவிப்பதாக அமையும்.
பால் விற்பனையில் சந்தையில் கோலோச்சி வரும் இதர பிராண்டுகளை காட்டிலும் பதஞ்சலி பாலின் விலை ரூ.2 குறைவாகவே இருக்கும் என்றார் அவர்.
பால் பொருள்கள் தவிர, பதஞ்சலி நிறுவனம் "திவ்ய ஜல்' என்ற பெயரில் குடிநீர் விற்பனையையும் தொடங்கியுள்ளது.மேலும், இயற்கை மினரல் மற்றும் மூலிகை கலந்த தண்ணீர் விற்பனையையும் தொடங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.