அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 ஏடிஎம்களில் சூரிய தகடுகளை (சோலார் பேனல்) நிறுவ உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: பாரத ஸ்டேட் வங்கி தற்போது 1,200 ஏடிஎம்களை சூரிய தகடுகள் மூலம் இயக்கி வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 10,000 ஏடிஎம்களாக உயர்த்தப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கையை வங்கி மேற்கொண்டுள்ளது. கார்பன் வெளியீட்டை இல்லாமல் செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அடுத்தாண்டில், வங்கியின் 250 கட்டடங்களில் சூரிய தகடுகளை பொருத்துவதே எங்களின் இலக்காக உள்ளது. மேலும், 2030-க்குள் வங்கிக்கு சொந்தமான அனைத்து வாகனங்களையும் மின் வாகனங்களாக மாற்றியமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.