பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மத்திய அரசு, சிறு சேமிப்புகளுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது. அதன்படி, அக்டோபர்-டிசம்பர் காலாண்டுக்கு என்எஸ்சி, பிபிஎஃப் உள்ளிட்ட திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.4 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிதி அமைச்சகத்தின் அறிவிக்கை:
பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.6 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று, கிஸான் விகாஸ் பத்திர (கேவிபி) டெபாசிட்டுக்கான வட்டியும் 7.3 சதவீதத்திலிருந்து 7.7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐந்தாண்டு குறித்த கால டெபாசிட், தொடர் வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் முறையே 7.8 சதவீதம், 7.3 சதவீதம் மற்றும் 8.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இருப்பினும், சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம் 4 சதவீதமாகவே தொடரும். அதேநேரம், பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக திட்டமான சுகன்யா சம்ருதி சேமிப்புக்கான வட்டி 8.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 1-3 ஆண்டுகள் குறித்த கால டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் 0.3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு சேமிப்புகளுக்கான வட்டியை மத்திய அரசு உயர்த்தியதைத் தொடர்ந்து வங்கிகளும் டெபாசிட்டுகளுக்கான வட்டியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.