சாதகமற்ற நிலவரங்களால் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததையடுத்து பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1,000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும், சில நிமிடங்களில் பங்குச் சந்தைகள் கடும் சரிவிலிருந்து மீண்டு முதலீட்டாளர்களுக்கு நிம்மதி அளித்தது.
நிதி நெருக்கடி அச்சம் காரணமாக திவான் ஹவுசிங் பைனான்ஸ் பங்குகளின் விலை 42 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தது. அதேபோன்று, யெஸ் வங்கி பங்கின் விலையும் 28.71 சதவீதம் சரிந்தது. மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 279 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 36,841 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 91 புள்ளிகள் குறைந்து 11,143 புள்ளிகளில் நிலைத்தது. பங்குச் சந்தைகளில் கடந்த நான்கு நாள்களில் ஏற்பட்ட சரிவால், முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.5.6 லட்சம் கோடியை எட்டியுள்ளது.