சென்ற ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டில் விமானப் பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை 17.17 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 96.9 லட்சமாக இருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை 17.17 சதவீதம் அதிகரித்து 1.13 கோடியாக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்த அளவில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாத கால அளவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 21.20 சதவீதம் உயர்ந்து 9.14 கோடியை எட்டியுள்ளது. கடந்தாண்டில் இது 7.54 கோடியாக காணப்பட்டது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தையில் இன்டிகோ 41.9 பங்களிப்பைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ஜெட் ஏர்வேஸ் 13.8 சதவீத பங்களிப்பையும், ஏர் இந்தியா 12.7 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளன.
நடப்பாண்டு ஜூலையில் இன்டிகோ நிறுவனம் அதிகபட்சமாக 47.57 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. இதைத் தொடர்ந்து, ஜெட் ஏர்வேஸ் 15.61 லட்சம் பயணிகளையும், ஏர் இந்தியா 14.41 லட்சம் பயணிகளையும் சுமந்து சென்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
ஆகஸ்ட் மாதத்தில் ஜெட் ஏர்வேஸ் 14.04 லட்சம் பயணிகளையும், கோ-ஏர் 10.14 லட்சம் பயணிகளையும் கையாண்டுள்ளதாக அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.