பொதுத் துறை நிறுவனமான பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (பிஎஃப்சி) நிறுவனத்தில் வைத்துள்ள பங்குகளை ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் (ஆர்இசி) நிறுவனத்துக்கு விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
மின் துறையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்களுக்கு பிஎஃப்சி மற்றும் ஆர்இசி நிறுவனங்கள் தேவையான நிதி உதவியினை அளித்து ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
பிஎஃப்சி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள 65.61 சதவீத பங்குகளை ஆர்இசி-க்கு விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான விவாதங்கள் ஆரம்ப கட்ட நிலையில்தான் உள்ளன.
தற்போதைய சந்தை விலை அடிப்படையில், இந்த பிஎஃப்சி பங்கு விற்பனை மூலம் மத்திய அரசுக்கு ரூ.13,000 கோடி கிடைக்கும் என்றார் அவர்.
கடந்த 2017-18 நிதியாண்டு நிலவரப்படி, ஆர்இசி நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.46 லட்சம் கோடியாக இருந்தது. இதில், கையிருப்பு உபரி ரூ.33,515.59 கோடியாக காணப்பட்டது.
மேலும், இந்நிறுவனத்தின் நிகர அளவிலான சொத்து மதிப்பு ரூ.35,490 கோடியாகவும், ரொக்க மற்றும் வங்கி இருப்பு ரூ.1,773 கோடியாகவும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டே, மத்திய அரசு
ஆர்இசி-க்கு பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளது.
ஹெச்பிசிஎல் நிறுவனத்தில் வைத்திருந்த 51.11 சதவீத பங்குகள் முழுவதையும் ஓஎன்ஜிசிக்கு விற்பனை செய்ததன் மூலம் மத்திய அரசு ரூ.36,915 கோடியை திரட்டியது. அதன் தொடர்ச்சியாகவே, இந்த நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.