கூகுள், முகநூல் போன்ற இணையதள பெருநிறுவனங்களுக்கு புதிய வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக, நியூஸிலாந்து அரசு தெரிவித்துள்ளது. நியூஸிலாந்தில் அந்த நிறுவனங்கள் ஈட்டும் வருவாய்க்கும், அவை செலுத்தும் வரிக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளதால், புதிய வரி விதிக்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு முன்னெடுத்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஜெஸிந்தா ஆர்டென் கூறியதாவது:
நியூஸிலாந்தில் தற்போதுள்ள வரி நடைமுறையானது, தனிநபர்களையும், பன்னாட்டு நிறுவனங்களையும் ஒரேபோல் நடத்தும் வகையில் இல்லை. இது, நியாயமற்றதாகும்.
கூகுள், முகநூல் போன்ற இணையதள பெருநிறுவனங்கள், நமது நாட்டில் அதிக வருவாய் ஈட்டுகின்றன. ஆனால், அவை செலுத்தும் வரியோ மிகக் குறைவாக உள்ளது. எனவே, இணையதள பெருநிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை வரி என்ற பெயரில் புதிய வரியை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த நிறுவனங்கள் ஈட்டும் வருவாயில் 2 முதல் 3 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்றார் அவர்.
அடுத்த ஆண்டு முதல் புதிய வரி அமலுக்கு வரும் என்று அந்நாட்டின் வருவாய்த் துறை அமைச்சர் ஸ்டூவர்ட் நாஷ் தெரிவித்தார்.
நியூஸிலாந்தில் இணையதள பெரு நிறுவனங்களின் வருடாந்திர வர்த்தகத்தின் மதிப்பு 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 55 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் கிடைக்கும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.