ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் தன்னிச்சையான கடன் மேலாண்மை அலுவலகத்தை அமைப்பதற்கான நேரம் கனிந்து விட்டது என நீதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பொது கடன் மேலாண்மை முகமை அமைப்பை (பிடிஎம்ஏ) உருவாக்கும் யோசனையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த 2015-ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின்போது வெளியிட்டார். அந்த திட்டம் அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆன போதிலும் அதனை நடைமுறைப்படுத்த சாத்தியக்கூறுகள் இல்லாததால் அந்த திட்டம் அமலாக்கம் பெறவில்லை.
இந்த நிலையில், அருண் ஜேட்லியின் திட்டத்தை நடைமுறைப்படுத்த காலம் கனிந்து விட்டதாக நீதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது:
கடன் மேலாண்மைக்கு தன்னிச்சையான அலுவலகம் என்பது மிக முக்கியமானது. ஏனெனில், பொது கடன் மேலாண்மையில் அதிக கவனத்தை நாம் செலுத்துவதற்கு அது பேருதவியாக இருக்கும். மேலும், அரசின் செலவினத்தை குறைப்பதற்கும் அது உதவியாக இருக்கும் என்றார் அவர்.
சந்தை கடன் உள்ளிட்ட அரசு கடன் பெறும் நடவடிக்கைகளை தற்போது ரிசர்வ் வங்கி மட்டுமே மேலாண்மை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.