கடன் சுமையில் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு இடைக்கால நிதியாக ரூ.500 கோடி கடன் அளிப்பதற்கு பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு பரிசீலித்து வருகிறது.
அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநர் சுனில் மேத்தா, இதுகுறித்து மேலும் கூறியதாவது:
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது நிதி நிலைமையை ஸ்திரப்படுத்த விரும்புகிறது. இதற்காக, வங்கிகளிடம் இருந்து கடன் வாங்க முடிவு செய்துள்ளது. அந்த நிறுவனத்துக்கு இடைக்கால கடனுதவி அளிப்பதற்கு பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு தயாராக உள்ளது. கடனுதவி அளிப்பதால், மதிப்பும் உயர்த்தப்படும்.
மேலும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடனுதவி அளிப்பது குறித்து வங்கிகள் கூட்டமைப்பு ஏற்கெனவே விவாதித்து வருகிறது. எனினும், இன்னும் இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை என்றார் அவர்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் வாரியக் குழு கூட்டம், கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடனுதவி அளிக்கும் வங்கிகளை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ளும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.