இந்தியாவில் ஹைபிரிட் கார்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என டொயோட்டா நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மஸகாஷு யோஷிமுரா செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சுற்றுச் சூழலுக்கு உகந்த டொயோட்டாவின் ஹைபிரிட் செடன் வகையைச் சேர்ந்த கேம்ரி கார் வெள்ளிக்கிழமை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே போன்ற ஹைபிரிட் வகையைச் சேர்ந்த மேலும் பல மாடல்களை நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய ஏதுவாக நிலையான விதிமுறைகள் மற்றும் வரி குறைப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
பெட்ரோல், மின்சாரத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும் ஹைபிரிட் வகை கார்கள்தான் இந்தியாவுக்கு தற்போது மிக முக்கியமான தேவையாக உள்ளது. இதனால், எரிபொருள் இறக்குமதியால் அதிக அளவிலான அந்நியச் செலவாணி வெளியேறுவது கட்டுப்படுத்தப்படுவதுடன், வாகன மாசும் பெருமளவில் குறையும் என்றார்.