தனியார் துறை வங்கியான இன்டஸ்இண்ட் முதல் காலாண்டில் ரூ.1,432.50 கோடி நிகர லாபம் ஈட்டியது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ஈட்டிய லாபம் ரூ.1,035.72 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 38 சதவீதம் அதிகம்.
மொத்த வருவாய் ரூ.6,369.75 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.8,624.62 கோடியானது.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி 1.15 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் விகிதம் நடப்பு நிதியாண்டில் 2.15 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோன்று நிகர வாராக் கடன் விகிதமும் 0.51 சதவீதத்திலிருந்து 1.23 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வாராக் கடன் அதிகரிப்பையடுத்து அதன் இடர்பாட்டுக்காக நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.430.62 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் இது ரூ.350 கோடியாக காணப்பட்டது என செபியிடம் இன்டஸ்இண்ட் வங்கி தெரிவித்துள்ளது.