தனியார் துறையைச் சேர்ந்த கர்நாடகா வங்கி முதல் காலாண்டில் ரூ.175 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி செபிக்கு தெரிவித்துள்ளதாவது:
கர்நாடகா வங்கி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ரூ.1,829.16 கோடி வருவாய் ஈட்டியது. 2018-19 நிதியாண்டில் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.1,616.44 கோடியுடன் ஒப்பிடும்போது இது அதிகம். நிகர லாபம் ரூ.163.24 கோடியிலிருந்து 7 சதவீதம் உயர்ந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.175.42 கோடியைத் தொட்டது.
சென்ற ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி வங்கி வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 4.72 சதவீதத்திலிருந்து குறைந்து 4.55 சதவீதமானது. இருப்பினும், நிகர அளவிலான வராக் கடன் விகிதம் 2.92 சதவீதத்திலிருந்து 3.33 சதவீதமாக உயர்ந்தது. வாராக் கடன் இடர்பாடுகளுக்காக ஒதுக்கப்படும் தொகை ரூ. 222.06 கோடியிலிருந்து குறைந்து ரூ. 201.14 கோடியானது.
வங்கியின் மொத்த வர்த்தகம் 9.85 சதவீதம் அதிகரித்து ரூ.1,21,339.52 கோடியைத் தொட்டுள்ளது என செபியிடம் கர்நாடகா வங்கி தெரிவித்துள்ளது.