பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த ஏதுவாக கடன்பத்திரங்கள் மூலம் ரூ.55,000 கோடி திரட்ட நபார்டு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து நபார்டு தலைவர் ஹர்ஷ் குமார் பன்வாலா கூறியதாவது: கடந்த நிதியாண்டில் சந்தையிலிருந்து கடன் திரட்டியதைப் போலவே நடப்பாண்டிலும் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, 2019-20 நிதியாண்டில் கடன்பத்திரங்களை வெளியிட்டு உள்ளூர் சந்தையிலிருந்து ரூ.55,000 கோடியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கடன்பத்திரங்கள் அனைத்தும் 10 முதல் 15 ஆண்டுகள் என்ற நீண்ட முதிர்வு காலத்தைக் கொண்டதாக இருக்கும்.
திரட்டப்படும் இந்த தொகை நபார்டு வர்த்தகத்தை பெருக்கவும், மத்திய அரசின் கிராமப்புற மேம்பாடு மற்றும் பல்வேறுபட்ட வேளாண் திட்டங்களுக்கு ஆதரவளிக்கவும் பயன்படுத்தப்படும். வர்த்தக நடவடிக்கைகளின் விரிவாக்கத்துக்காக நபார்டு ஏற்கெனவே நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.12,000 கோடியை திரட்டிக் கொண்டுள்ளது என்றார் அவர்.