ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் 2-ஆவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
கடந்த 2016 செப்டம்பர் மாதம் தொலைத் தொடர்புத் துறைக்குள் நுழைந்த ஜியோ நிறுவனம், சுமார் 32.29 கோடி சந்தாதாரர்களையும், தொலைத் தொடர்புச் சந்தை வருவாயில் 27.80 சதவீதத்தையும் கொண்டுள்ளது. 1995-ஆம் ஆண்டு முதல் தொலைத் தொடர்புத் துறையில் இருந்து வரும் ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ஜியோ இந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
டிராய் அளித்துள்ள தகவலின்படி, இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக வோடஃபோன்-ஐடியா நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. கடந்த மே 31-ஆம் தேதி நிலவரப்படி அந்த நிறுவனத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 38.75 கோடியாகவும், தொலைத் தொடர்புச் சந்தை வருவாயில் அதன் பங்கு 33.36 சதவீதமாகவும் உள்ளது. 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள ஏர்டெல் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 32.03 கோடி.